அண்ணாமலையை பதவியிலிருந்து தூக்க.. நிறைய ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு.. காயத்ரி ரகுராம் பகீர்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர் பிரபலமடைவதற்காக என் பெயரை பயன்படுத்திக் கொள்கிறார் என பாஜகவிலிருந்து அண்மையில் விலகிய காயத்ரி ரகுராம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
நடிகை, நடன இயக்குநர், அரசியல்வாதியாக அறியப்படுகிறார் காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் நிர்வாகியாக இருந்தார். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் காயத்ரியே விலகிவிட்டார்.
இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போதிலிருந்தே அண்ணாமலை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தார் காயத்ரி. தற்போது பல்வேறு சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் காயத்ரி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

2 மாதங்கள்
அவர் கூறுகையில் கடந்த 2 மாதங்களாக தமிழக பாஜகவில் மட்டும் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. பெண்களுக்கு அண்ணாமலை எந்த விதத்தில் ஆதரவாக இருக்கிறார் என்ற கேள்வியை அவரிடம் கேட்க விரும்புகிறேன். டெய்சி திருச்சி சூர்யா சிவா இடையே நடந்த ஆடியோ விவகாரத்திலும் அண்ணாமலை சமரசம் செய்து திருச்சி சூர்யாவை கட்சியில் உள்ள பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்தார்.

திருச்சி சூர்யா
திருச்சி சூர்யா கட்சியிலிருந்து விலகிவிட்டார். ஆனாலும் அவரது விலகலை அண்ணாமலை ஏற்கவில்லை. அடிப்படையில் திருச்சி சூர்யாவின் தவறு செய்பவர். அவர் ஒருவருக்கு மட்டும் எதையும் செய்யவில்லை. அலிஷா அப்துல்லாவிடம் ஆபாசமாக பேசியுள்ளார். அதுவும் டெய்சி ஆடியோ லீக்கான அதே மாதத்தில் ! அலிஷா செய்தியாளர்களை சந்தித்து திருச்சி சூர்யா மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

மாவட்டச் செயலாளர்கள்
கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சுமார் 150 பேர் முன்பு அண்ணாமலை என்னை பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ளார். துபாய் ஹோட்டலில் நான் திமுக பிரமுகருடன் இருந்ததாக தவறான அர்த்தத்தில் பேசியுள்ளார். அங்கு நடந்ததை சொன்னால் அசிங்கமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஆதாரமே இல்லாமல் ஒரு பெண்ணை எப்படி மோசமாக பேச முடியும்? அண்ணாமலையை பதவியிலிருந்து இறக்க என்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

கவலையில்லை
அண்ணாமலை அவருடைய பேட்டியில் "காயத்ரி ரகுராம் அவரை பற்றி நிறைய குற்றச்சாட்டுகளை வைக்கட்டும் நான் அதுகுறித்து கவலைப்படவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதால் மக்கள் என்னை பற்றி பேசுவார்கள் என்றும் நான் மக்களிடம் மேலும் பிரபலமடைவேன்" என்றும் தெரிவித்திருந்தார். அப்படியெனில் என் பெயரை அவர் பிரபலம் அடைய பயன்படுத்துகிறாரா.

குற்றச்சாட்டுகள்
நான் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்காமல் தான் பிரபலமடைகிறேன் என எந்த தலைவராவது சொல்வார்களா? பாஜகவில் சமஉரிமை, சமத்துவம் இல்லை. அண்ணாமலை பாஜகவில் உள்ள பெண்களிடம் தோல்வியடைந்துள்ளார். திருச்சி சூர்யாவின் ராஜினாமாவை ஏற்காத என்றும் காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். மேலும் நேற்றைய தினம் காயத்ரி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூட அண்ணாமலையிடம் நான் நேர்காணல் நடத்த வேண்டும். அவர் என்னை சந்திக்க தைரியம் இருக்கிறதா என கேட்டுள்ளார். மேலும் தான் எதற்காக திமுக நிர்வாகியை சந்தித்தேன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாள் விழா
சென்னையில் நடந்த ஒரு பிறந்த நாள் விழாவில் திமுக பிரமுகர் வந்தார். அவர் எல்லா விஐபிகளையும் போல் வந்துள்ளார். என்னிடம் வந்து நலம் விசாரித்தார். நான் நாகரீகம் கருதி அவரை நலம் விசாரித்தேன். திமுகவை சேர்ந்தவர் என்பதால் அவரை கத்தியால் நான் குத்தி விட முடியுமா? என்றும் காயத்ரி ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தார்.












Click it and Unblock the Notifications