தை மாதத்தில் இடி மின்னலுடன் 4 நாட்களுக்கு கனமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்
டெல்டா மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு நெற்கதிர்கள் தயாராக இருக்கும் இந்த நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழையும் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் கோடியக்கரையில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யத்தில் 7 செமீ மழையும் திருப்பூண்டியில் 5 செமீ மழையும், வேளாங்கண்ணியில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, காரைக்கால், நாகை மாவட்டம் திருக்குவளையில் தலா 3 மழை பதிவாகியுள்ளது. நாகை மாவட்டம் தலைஞாயிறு, நாகப்பட்டினம், திருவாரூர், பாண்டவையார் பகுதியில் தலா 2 மழை பதிவாகியுள்ளது. குடவாசல், மதுக்கூர், அதிராம்பட்டினம் பகுதிகளில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு இடி மின்னலோடு மழை பெய்யுமாம்... குடை அவசியம் மக்களே
மழை நீடிக்கும்
இந்த நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
நாளைய தினம் தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் மழை
13ஆம்தேதி முதல் 15ஆம் தேதி வரைக்கும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றைய தினம் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளைய தினம் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கவலையில் விவசாயிகள்
பருவம் தவறி பெய்யும் மழையால் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். வடகிழக்குப் பருவமழை நவம்பர் மாதத்தில் கொட்டித்தீர்த்ததால் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழை வெள்ளத்திற்கு தப்பி அறுவடைக்கு தயாராக உள்ள இந்த நேரத்தில் பெய்யும் மழையால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.