பரிதாபம்.. வண்டலூரில் ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி, இளைஞர் பலி.. தொடரும் உயிரிழப்புகள்
சென்னை: வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவியும், இளைஞரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் ரயில் மோதி பொதுமக்கள் உயிரிழப்பது தொடர் நிகழ்வுகளாக மாறி வருகின்றன. விதிமுறைகளை மீறி ரயில் தண்டவாளத்தை கடப்பதே இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ காரணமாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரயில் தண்டவாளங்களை கடப்பது எந்நேரமும் ஆபத்தை விளைவிக்கும் என பல முறை எச்சரித்தும் மக்கள் அதை கேட்பதில்லை என்று அவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
கோவை அருகே ரயில் மோதி யானை பலி.. ரயில்வே பொதுமேலாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!
அலட்சியத்தின் விலை மரணம்
சென்னை மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது மின்சார ரயில்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. நாளொன்றுக்கு சுமார் 20 லட்சம் பேர் இந்த புறநகர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பயணிகளின் வசதிக்காக ரயில் தண்டவாளங்களுக்கு மேலே நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சிலர் இந்த மேம்பாலங்களை பயன்படுத்துவது கிடையாது. குறிப்பாக, காலை அலுவலகம், பள்ளி - கல்லூரி செல்லும் நேரங்களில் மாணவர்கள் முதல் அலுவலகம் செல்வோர் தங்கள் அவசரத்துக்காக ரயில் தண்டாவளங்களை கடப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் பல நேரங்களில் ரயில்களில் அடிபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதுபோன்ற சம்பவம்தான் வண்டலூரில் நடைபெற்றிருக்கிறது.
கல்லூரி மாணவி
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சோனியா (19). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். இவர் தனது கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேற்று சென்றார். பின்னர், உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் மாலை வீடு திரும்புவதற்காக வண்டலூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அப்போது நடைமேடைக்கு செல்வதற்காக சோனியா தண்டவாளத்தை கடக்க முற்பட்டார்.
உடல் சிதறி பலி
அப்போது அங்கு வேகமாக வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், சோனியா மீது மோதி தூக்கி வீசியது. இதில் தோழிகள் கண் முன்னே உடல் சிதறி சோனியா பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அவரது தோழிகள் கதறி அழுதனர். பின்னர் தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து சோனியாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே மாதத்தில் 10 பேர்..
இதேபோல, பெருங்களத்தூரில் சசிகுமார் (25) என்ற இளைஞர் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற போது அங்கு வந்த செந்தூர் எக்ஸ்பிரஸில் அடிபட்டு உயிரிழந்தார். வண்டலூர், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் ரயில் மோதி மக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வண்டலூர், பெருங்களத்தூரில் 10-க்கும் மேற்பட்டோர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் தண்டவாளத்தை கடக்கும் போது தான் ரயிலில் அடிபட்டுள்ளனர்.