”கணவர் கைவிட்ட வரலாறு இருக்கு.. கல்வி கைவிட்ட வரலாறு இல்லை” புதுமைப் பெண் திட்ட விழாவில் மாணவி பேச்சு
சென்னை: புதுமைப் பெண் திட்ட தொடக்க விழாவில், கல்வி மற்றும் திருமணம் குறித்த இஸ்லாமிய மாணவி ஒருவரின் பேச்சு பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

புதுமைப் பெண் திட்டம்
தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார்.

முதல்வர் ஸ்டாலின்
இதனைத்தொடர்ந்து புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மாணவிகளுக்கு டெபிட் கார்டுகளை வழங்கினார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்க இஸ்லாமிய மாணவி ஒருவர் மேடைக்கு வந்தார். அவர் பேசுகையில், திருவாரூரைச் சேர்ந்த நான், சிறுவயது முதலே அரசுப் பள்ளியில் தான் படித்து வருகிறேன். தந்தை இல்லாததால், அம்மாவும் மாமாவும் தான் என் கல்விக்கு உதவி வருகின்றனர். பொருளாதர அளவில் மிகவும் பின்தங்கிய குடும்பம்.

மாணவியின் அசத்தல் பேச்சு
இப்போது ஓமந்தூரர் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய எங்களைப் போன்ற ஏழை மாணவிகளுக்கு, இந்த புதுமைப் பெண் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்காக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு எனது நன்றி என்று தெரிவித்தார்.

கல்வி கைவிட்டதில்லை
தொடர்ந்து தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். அதில், தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றி அமைத்து புதுமைப் பெண் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறாரே என்று யாரும் பிற்போக்காக நினைக்கக் கூடாது. ஏனென்றால் பல கோடி ரூபாய் செலவு செய்து செய்யப்படும் திருமணத்திற்கு பின், கணவர் கைவிட்ட வரலாறு ஏராளம் உண்டு. ஆனால் சில ஆயிரம் செலவு செய்து கற்ற கல்வி கைவிட்டதா வரலாறே கிடையாது. இதனால் தமிழக அரசின் திட்டத்தை மக்கள் புரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அரங்கம் அதிர கைதட்டல்
மாணவியின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உட்பட அனைவரும் கைதட்டி பாராட்டினார். அதேபோல் கீழே அமர்ந்திருந்த மாணவிகளின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது.












Click it and Unblock the Notifications