முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பாராட்டிய ஜி.கே.வாசன்.. அதேவேகத்தில் திமுக அரசு மீது அட்டாக்!
சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டியுள்ளார்.
காமராஜரின் அடித்தளத்தில் தமிழகம் வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது என காலை உணவுத் திட்டத்தை வரவேற்றுள்ளார் ஜி.கே.வாசன்.
அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், திமுக அரசின் திட்டத்தைப் பாராட்டியுள்ளது கூட்டணி கட்சிகளால் கவனிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 19ஆம் தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

காலை உணவுத் திட்டம்
1 ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அங்கிருந்த குழந்தைகளுடன் அமர்ந்து உணவைச் சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், அருகில் இருந்த சிறுமிக்கு உணவை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். இந்நிலையில், இன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

கூட்டணியில்
அதேநேரம், அதிமுக மூத்த நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தொடங்கப்பட்ட சத்துணவு திட்டத்தை அப்போது விமர்சித்த திமுக, இப்போது காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது என விமர்சித்தனர். பாஜகவோ, தாங்கள் தேசியக் கல்விக் கொள்கையில் குறிப்பிட்ட திட்டத்தைத்தான் தமிழக அரசு செயல்படுத்தி இருக்கிறது எனக் கூறினர். இந்நிலையில் தான் அவர்களின் கூட்டணி கட்சியான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இந்தத் திட்டத்தை வரவேற்றுள்ளார்.

திமுக அரசுக்குப் பாராட்டு
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதுஅவரிடம் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்த காலை உணவுத் திட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், காமராஜரின் அடித்தளத்தில் தமிழகம் வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது என இத்திட்டத்தை வரவேற்று பாராட்டினார். எதிர் கூட்டணியில் இருந்தாலும் ஜி.கே.வாசன் இந்த திட்டத்தைப் பாராட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக மீது விமர்சனம்
ஆனால், உடனே திமுகவை கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார் ஜிகே வாசன். தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது. இந்த அரசு சாமானிய மக்களைப் பற்றி துளியும் கவலை கொள்ளாத அரசாக உள்ளது. மின் கட்டண உயர்வை எதிர்த்து வருகிற 19ஆம் தேதி சேலம் மாநகரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை தமிழ் மாநில காங்கிரஸ் நடத்தவுள்ளது என்றார்.

பாஜக தான்
மேலும் பேசிய அவர், ராகுல் காந்தியின் நடைபயணம் நாடு முழுவதும் செல்வாக்கை இழந்துள்ள காங்கிரஸ் கட்சியை மீட்பதற்குத்தானேயொழிய அது நாட்டிற்காக அல்ல, இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதி எனத் தெரிவித்தார். திமுக அரசின் திட்டத்தைப் பாராட்டிய கையோடு, பாஜக ஆட்சி தான் என்றும் பேசி கூட்டணி சலசலப்பைத் தவிர்த்துள்ளார் ஜிகே வாசன்.












Click it and Unblock the Notifications