தங்கம்னு சொன்னாலே காசு கேப்பாங்க போலயே! புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை! கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
சென்னை: தங்கத்தின் விற்பனை விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து, 7300க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 58,400 க்கு விற்பனையாவதால் தங்கத்தில் முதலீடு செய்ய நினைக்கும் நடுத்தர குடும்ப மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் நாள்தோறும் இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில் அதற்கு முன்னதாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

கடந்த ஜூலை மாதத்தில் மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் சுங்கவரி குறைக்கப்பட்டது. அப்போது லேசாக தங்கத்தின் விலை சரிந்த நிலையில், அதற்குப் பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.
நாளுக்கு நாள் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் சுப நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்கு தங்கம் வாங்குவது, பாதுகாப்பான முதலீட்டுக்கு தங்கத்தை தேர்ந்தெடுப்பது என வர்த்தகம் தங்கத்தை நோக்கிய இருந்ததால் தங்கத்தின் விலை விண்ணை தொட்டு வருகிறது. இதனால் சுப நிகழ்ச்சி மற்றும் முதலீடு, சேமிப்புக்காக தங்கம் வாங்கும் நகை பிரியர்களும் இல்லத்தரசிகளும் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 58,400 என்ற புதிய உச்ச விலையை தொட்டு இருக்கிறது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல வெள்ளியும் கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து 109 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து ஒன்பது ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 48,200க்கும், கிராமுக்கு பத்து ரூபாய் உயர்ந்து 6025-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 22 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 7964 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் 63 ஆயிரத்து 712 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய விட 24 கேரட் தங்கத்தின் விலை 126 ரூபாய் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 1500 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகளில் போர் காரணமாக பதற்றத்தில் எண்ணெய்க்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்வது, அமெரிக்க அதிபர் தேர்தல், தங்க பத்திரத்தில் முதலீடு, பண்டிகைக் கால விற்பனை உள்ளிட்டவை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிக அளவில் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் வரும் காலங்களில் விலை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் தற்போதே தங்கத்தை வாங்குவது நல்லது.. இல்லையே வரும் நாட்களில் மேலும் விலை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications