”மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும்” இளைஞர் கேள்விக்கு பதிலளித்த பிடிஆர்.. மகிழ்ச்சி!
சென்னை: மதுரையில் தொழில் வளர்ச்சி தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பதிவு இளைஞர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டர் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி வருபவர். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில், வளர்ச்சித் திட்டங்களுக்கான அடுத்தக் கட்ட பணிகள், தமிழ்நாட்டின் பிரச்னைகள், இளைஞர்களின் கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான பதில் என்று அவரின் ட்விட்டர் பக்கம் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
அண்மையில் அவர் வாகனத்தில் செருப்பு வீசிய பாஜக நிர்வாகியை சிண்ட்ரெல்லா என்று அறிவுப்பூர்வமாக கிண்டல் செய்தது தேசிய அளவில் கவனம் பெற்றது. அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை மீதான குற்றச்சாட்டுகளையும் ஆதாரப்பூர்வமாக ட்விட்டரிலேயே வெளியிட்டார். அதேபோல் ஒவ்வொரு நாளும் அவரின் செயல்பாடுகளையும் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு.. பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது!
தொழில் முதலீடு
இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனம் மற்றும் ஹால்டியா குழுமத்தினர் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய உள்ளது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக பதிவிட்டிருந்தார்.
இளைஞர் கேள்வி
இதற்கு மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சார், மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் வேலவாய்ப்புக்காக சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களையே சார்ந்து உள்ளோம். இதனால் மதுரையில் அதிக தொழில் முதலீடுகளையும், தொழிற்சாலைகளியும், ஐடி நிறுவனங்களையும் கொண்டு வர வேண்டும். மதுரைக்கு தொழி முதலீடுகள் வராமல் இருப்பதற்கு, சிப்காட் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே பிரச்னையாக இருக்கிறது. இதற்கு நடவடிக்கை தேவை என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
பிடிஆர் பதில்
இதற்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரையில் தொழில் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் மதுரைக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்று பதில் அளித்துள்ளார்.
இளைஞர்கள் எதிர்பார்ப்பு
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பதில் மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தென் மாவட்ட இளைஞர்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்புக்காக சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களையே சார்ந்துள்ளனர். இதனால் மதுரையை மையமாக வைத்து தொழில் வளர்ச்சி செய்யப்பட்டால், தென் மாவட்ட இளைஞர்களுகள் வேலை வாய்ப்புக்காக வெளியில் செல்ல வேண்டிய தேவை இருக்காது என்று கருதுகின்றனர்.