நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி.. ரூ.2,000 கோடி வரப்போகுது
மதுரை: மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிதி நிறுவனங்கள் நியோமேக்ஸ், ஹெல்பின், எம்.ஆர்.டி.டி. ஆகியவை மோசடியில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன.இந்த நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக பல கோடி சொத்துக்கள் உள்ளன. இந்தநிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக 60,000 பேர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் முதற்கட்டமாக ரூ.2,000 கோடி சொத்துகள் பொதுஏலம் நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நிதி நிறுவனங்கள் நியோமேக்ஸ், ஹெல்பின், எம்.ஆர்.டி.டி. ஆகியவை மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதில் நியோமேக்ஸ் நிறுவனம் கடந்த 10வருடம் முன்பு தொடங்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனம் பணத்திற்கு மாத வட்டி வழங்கி,குறிப்பிட்ட ஆண்டில் முதிர்வு தொகை வட்டியுடன் அசல் வழங்கப்படும் என்று உறுதி அளித்தது. இதனை நம்பி பலரும் முதலீடு செய்தனர்.

தேனி மாவட்டத்தில் மட்டுமே 500 கோடி வரை முதலீடு செய்திருந்தார்கள்.இன்னும் குறிப்பாக சொல்வது என்றால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் என்ற கிராமத்தினர் மட்டுமே 200 கோடி நியோமேக்ஸில் முதலீடு செய்திருந்தார்கள். இவர்களுக்கு அசல் மற்றும் வட்டி என எதுவுமே வரவில்லை. தேனி மாவட்டத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுக்க பல ஆயிரம் கோடி மோசடி நடந்திருந்தது.
அதன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்கண்ட நிறுவனங்களின் பல கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி உள்ளனர். இந்நிலையில் இந்த நிதி நிறுவனங்களின் இயக்குனர்கள் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி பரதசக்கரவர்த்தி விசாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த மனு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சொத்துகளை மேற்கண்ட நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்து கொடுப்பதற்கு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர், பதிவுத்துறையை சேர்ந்த அதிகாரி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த குழு நியோ மேக்ஸ்க்கு சொந்தமான சொத்துகளை கையகப்படுத்தியது.
நிலங்கள், ஓட்டல், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் என 4 வகையாக வகைப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 60 ஆயிரம் புகார்தாரர்கள் உள்ளனர். தற்போது ரூ.6,000 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் முதலில் கட்டிடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ரூ.2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை பொதுஏலம் நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications