குட் நியூஸ்! அரசு பள்ளி ஹெட்மாஸ்டர் ரூமுக்கு முன்னாடி இந்த போர்டு கட்டாயம்.. காரணம் என்ன?
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தொடக்கக்கல்வித் துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது பெற்றோர்களின் கவனத்தையும் வெகுவாக பெற்று வருகிறது. இதுகுறித்து இங்கே சுருக்கமாக நாம் பார்ப்போம்.
பொதுவாக மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி உரிமையை எந்த ஒரு கல்வி நிறுவனமும் மறுக்கக் கூடாது என்று மாற்றுத் திறனாளிகள் சட்டம் 16 மற்றும் 17 ஆகிய பிரிவுகள் மிகத் தெளிவாக வலியுறுத்துகின்றன..

அதேபோல தேசிய அறக்கட்டளை சட்டமானது ஆட்டிசம், மூளை முடக்குவாதம் மற்றும் அறிவுசார் குறைபாடு உடைய குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான உரிமைகளை சட்டப் பூர்வமாக உறுதி செய்துள்ளது. எவரையும் விட்டுவிடாத பொதுக்கல்வி என்ற உயரிய நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது.. இதற்காகவே ஸ்பெஷல் டிரெயினர்ஸ் அதாவது சிறப்பு பயிற்றுனர்களும் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்..
தமிழக பள்ளிக் கல்வித்துறை
ஆனாலும் நடைமுறையில் பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகளை பொதுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு தயக்கம் காட்டுவதாகவும், சேர்க்கை மறுக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.. இது போன்ற புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான், தற்போது நம்முடைய பள்ளிக் கல்வித்துறை முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது..
அதன்படி பள்ளியின் தலைமை ஆசிரியர் அறைக்கு முன்பாக இருக்கும் சுவரில், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் எளிதாக பார்க்கும் வகையில் பெரிய அறிவிப்பு பலகை ஒன்றை வைக்க வேண்டும்.. அந்த நோட்டீஸ் போர்டில் "அறிவுசார் குறைபாடு மற்றும் ஆட்டிச நிலை பாதிப்பு உடைய குழந்தைகள் இந்தப் பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்" என்ற வாசகத்தை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் தெளிவாக எழுத வேண்டும்..
ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகள்
இந்த உத்தரவானது ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கான சிறப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி பிறப்பிக்கப்பட்டுள்ளது..
இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட விவரம் மற்றும் அது தொடர்பான அறிக்கையை மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கும், ஆட்டிசம் சிறப்பு மையத்திற்கும் தலைமை ஆசிரியர்கள் விரைந்து அனுப்ப வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
அரசு பள்ளி ஹெட்மாஸ்டர் ரூம்
இதன் மூலம் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது... அதுமட்டுமல்ல, பள்ளிகளில் இத்தகைய அறிவிப்பு பலகைகளை வைப்பதன் மூலம், ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகளின் கல்வி உரிமை குறித்த விழிப்புணர்வும் நம்பிக்கையும் நிச்சயம் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது-
தலைமை ஆசிரியர்கள் சேர்க்கை வழங்க மறுக்க முடியாது என்பதை இது உறுதிப்படுத்துவதுடன், சமூகத்தில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான பாகுபாடற்ற கல்வி சூழலை உருவாக்க வழிவகை செய்கிறது.. சட்டப்பூர்வமான இந்த அறிவிப்பு பொதுமக்களின் பார்வையில்படும்போது, அந்த குழந்தைகளுக்கான கல்வி பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன் யாரையுமே விட்டுவிடாத பொதுக்கல்வி என்ற இலக்கை அடையவும் இது பெரிதும் உதவுகிறது என்றே நம்பப்படுகிறது...!!














Click it and Unblock the Notifications