திமுகவையே விரட்டி விரட்டி வர்றாரே தலைவர்.. அரசு ஊழியர் விஷயத்தையும் விடல.. ஸ்டாலினுக்கு போன மேட்டர்
சென்னை: இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பையும் திமுக அரசு பறித்துவிட்டது.. சமூகநீதி தாரை வார்க்கப்பட்டுள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
சட்டசபை தேர்தலுக்கான நாள் நெருங்கி வருகிறது.. இதற்காக அனைத்து தமிழக கட்சிகளும் இப்போதே தயாராகி கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

இதில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தினந்தோறும் ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார். திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறி, கடுமையாக விமர்சித்தும் வருகிறார். பால் விலை, முத்திரை கட்டணம் உயர்வு முதல் மின்கட்டணம் உயர்வு வரை, அரசு பஸ்களில் கட்டண உயர்வு என ஒவ்வொன்றையும் கண்டித்தும் வருகிறார்..
ஓபிஎஸ்: அந்தவரிசையில் இப்போது, அரசு பணியிடங்களில் இளைஞர்களை ஏன் இன்னமும் நிரப்பவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"பொதுவாக, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, மருத்துவ தேர்வாணையத்தின் மூலமாகவோ, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது பத்திரிகை விளம்பரத்தின் மூலமாகவோ நிரப்பப்படும்.
அரசு பணிகள்: இந்த முறையைக் கடைபிடிப்பதன்மூலம் அரசுப் பணிகளில் இருப்போருக்கு பதவி உயர்வு ஏற்படுவதோடு, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தி.மு.க. ஆட்சியில் நிலவுகிறது.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், சார்புச் செயலாளர் நிலை முதல் செயலாளர் நிலைவரை ஓய்வு பெற்றவர்கள் அதே பணியில் அமர்த்தப்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, அனைத்துத் துறைகளிலும் கடைநிலை ஊழியர் முதல் உதவியாளர் பதவி வரையிலான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
பொதுத்துறை: பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, அங்குள்ளவர்களுக்கு பதவி உயர்வு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் தி.மு.க. அரசால் பறிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சமூகநீதி தாரை வார்க்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஓய்வு பெற்றவர்களை பணியிலிருந்து உடனடியாக நீக்கிவிட்டு அந்த இடங்களை பதவி உயர்வு மூலம் பணியில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications