தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக டெல்லி பயணம்.. 2 நாளில் நடக்க போகும் 3 முக்கிய சந்திப்புகள்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 7.15 மணிக்கு விஷ்தாரா விமானம் மூலம் டெல்லி சென்றார். ஆளுநராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக டெல்லி சென்றுள்ள ஆர்.என்.ரவி, இரண்டு நாட்கள் தங்கியிருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளார்.
நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த 18-ம் தேதி ஆளுநராக பதவியேற்றார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி பீகார் மாநிலத்தில் பிறந்து கேரளாவில் பணியாற்றியவர்.
மத்திய உளவுத் துறையில் பணியாற்றிவரும் கூட. இதனால் இவரை தமிழக ஆளுநராக நியமித்ததற்கு தமிழகத்தின் திமுகவின் கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழக ஆளுநர்
தமிழகத்தின் ஆளுநராகப் பதவியேற்ற 18ம் தேதி அன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.என்.ரவி, அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ளது பெருமை அளிக்கிறது. தமிழக கலாச்சாரம் உலகில் மிகவும் பழமையான கலாச்சாரமாகும். இங்கு ஆளுநராக செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

பாலமாக இருப்பேன்
தமிழக ஆளுநர் பொறுப்பு சவாலாக இருக்குமா? என்ற கேள்விக்கு,- நான் இப்போதுதான் தமிழக கவர்னராக பொறுப்பேற்று இருக்கிறேன். பழமை வாய்ந்த தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன். தமிழ் மொழியை கற்றுக்கொள்ளவும் முயற்சி செய்வேன் என்றார். மேலும் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு -தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தின்படி பாடுபடுவேன். தமிழக அரசுக்கு என் முழு ஒத்துழைப்பு வழங்குவேன். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படுவேன்.

தமிழக அரசுக்கு பாராட்டு
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. கவர்னர் பதவி என்பது விதி விலக்குக்கு உட்பட்டது. அதற்கேற்ப செயல்படுவேன். தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தி உள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு சில காலம் அவகாசம் தேவை. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய கொரோனா தடுப்பூசிகளை பெற்று தருவேன் என்று ஆளுநர் ரவி அன்று கூறியிருந்தார்.

சட்டம் ஒழுங்கு விவகாரம்
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்று முன்தினம், ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரம், கடலோரப் பாதுகாப்பு பற்றி பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்ததாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

அமித்ஷாவை சந்திக்கிறார்
இந்நிலையில், பதவியேற்ற பிறகு முதல்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை 7.15 மணிக்கு விஷ்தாரா விமானம் மூலம் டெல்லி சென்றார். 2 நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications