குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகிறது?.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அப்டேட்!
சென்னை: தமிழகம் முழுவதும் சமீபத்தில் நடந்து முடிந்த குரூப் 2, 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவு அடுத்த மாதமும் குரூப் 4 தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு வேலைக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வருகின்றனர். எப்படியாவது படித்து அரசு வேலையில் சேர்ந்துவிடுவது அவர்களின் கனவாக இருந்து வருகிறது. இதனால் தேர்வு குறித்த அப்டேட்களை இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர். தேர்வு குறித்த அப்டேட்களை தெரிந்துகொண்டு அதற்கேற்றார்போல் டைம்டேபிள் போட்டு படித்து வருகின்றனர்.
இதில் டிஎன்பிஎஸ்சியால் அறிவிக்கப்பட்டு கடந்த மே மாதம் குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்வில் 9 லட்சத்து 94 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தமிழக அரசு அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 413 இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கு 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
முதலில், முதல் நிலை தெர்வில் பாஸ் செய்பவர்களுக்கு அடுத்ததாக முதன்மை தேர்வும் அதன்பிறகு நேர்முகத் தேர்வும்(சில பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது) நடத்தப்படும். இதில் தேர்வாகும் நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் பணிகள் வழங்கப்படும். இந்த நிலையில் முதல் நிலை தேர்வு நடந்து முடிந்து சுமார் 4 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவு குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடப்படாமல் இருந்ததால், தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என தேர்வு எழுதியவர்கள் காத்து இருந்து வந்தனர்.
இந்த நிலையில் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான தேர்வு முடிவு அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. முதலில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் போது முதல்நிலை தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அக்டோபர் மாதத்தில் இந்த தேர்வு முடிவு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் குரூப்-4 தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 7 ஆயிரத்து 138 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடந்தது. இந்த தேர்வுக்கான முடிவை எதிர்பார்த்தும் ஏராளமான இளைஞர்கள் காத்திருந்து வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி-யின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.