வீட்டுக்காவலில் இருந்த 2 தென் கொரியர்கள் செய்த செயல்.. வேதனையடைந்த நீதிபதி.. அதிரடி உத்தரவு!
சென்னை: ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு வழக்கில் ஜாமீனில் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றவர்களின் ஆதார் மூலம் வெளிநாட்டிற்கு தப்ப முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தென்கொரியாவைச் சேர்ந்த இருவருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஜி எஸ் டி வரி ஏய்ப்பு வழக்கில் சோவல் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சோய் யோங் சுக், பொது மேலாளர் சோ ஜோவான் ஆகிய இரு தென் கொரிய நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
மக்கள் பிரச்சனைகளை கவனிப்பதை விடுத்து... குழப்பம் ஏற்படுத்தும் வேலை அரசுக்கு எதற்கு..? -விஜயகாந்த்
வீட்டுக்காவல்
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் இருவரும் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம், அவர்களை திருச்சியில் உள்ள முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டது. தொடர்ந்து, இவர்கள் இருவரும் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களை சொந்த செலவில் வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது.
இருவர் மீதும் வழக்குப்பதிவு
வீட்டுக்காவலில் இருந்த போது தென் கொரிய நாட்டினர் இருவரும் வேறு நபர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி கொல்கத்தா வழியாக வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அவர்களின் வீட்டில் உதவியாளராக பணியாற்றியவர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நீதிபதி வேதனை
தாங்கள் கொடுத்த ரூ.7 லட்சம் பணத்தை திருப்பி கேட்டதற்காக பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, முன் ஜாமீன் கோரி சோய் யோங் சுக், சோ ஜோவான் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, இந்தியாவில் தொழில் துவங்க அரசு பல சலுகைகளை அறிவித்துள்ளதாகவும், சில வெளிநாட்டு நிறுவனங்கள் இதை தவறாக பயன்படுத்தி பொருளாதாரத்தை நிலை குலையச் செய்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
விசாரணையை தொடரலாம்
சட்டத்தை மதிக்கும் குடிமக்களின் பாதுகாப்புக்கு காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குற்ற வழக்குகளில் சிக்கிய தனிநபர்களின் பாதுகாப்புக்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வீட்டுக்காவலில் சொகுசு வாழ்க்கை வாழும் இவர்கள், தப்பிச் செல்ல முயற்சித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக காவல் துறையினர் புலன் விசாரணையை சட்டப்படி தொடரலாம் என கூறி, இருவரின் முன் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.