மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது குஜராத்தில் செருப்பை வீசினார்கள்.. பிறகு என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடி பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததால், பஞ்சாப் முதல்வர் மீதும் காங்கிரஸ் கட்சி மீதும் பா.ஜ.க-வினர் விமர்சனம் செய்துவரும் நிலையில், பிரதமராக மன்மோகன் இருந்தபோது குஜராத்தில் நடந்த செருப்பு வீச்சு சம்பவம் குறித்து பேசி வருகிறார்கள் காங்கிரஸ் தரப்பினர்.
பஞ்சாப் மாநிலத்துக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூரில் 42 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், அங்கு நடைபெறும் பேரணியில் உரையாற்றுவதற்காகவும் சென்றார்.
விமானநிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் செல்ல வேண்டிய பிரதமர், மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டார். இது பஞ்சாப் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
மோடி பாதுகாப்பில் குளறுபடி என நாடகம்-பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய சதி... முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி
விளக்கம் தேவை
பிரதமர் சென்ற வழியில், விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் காரணமாக மேம்பாலம் ஒன்றில் 15 முதல் 20 நிமிடம் வரை பிரதமர் நரேந்திர மோடி சிக்கிக்கொண்டார். ஃபெரோஸ்பூர் செல்ல முடியாததால், பின்னர் பிரதமர் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்பி சென்று டெல்லி புறப்பட்டார். பிரதமர் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். அதேபோல பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களும் இந்த நிகழ்வுக்குத் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
வலுக்கும் கண்டனம்
பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடிகளுக்கு காரணமான பஞ்சாப் ஆளும் காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவத் வலியுறுத்தி உள்ளார். அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு சட்டப்படி என்னென்ன பாதுகாப்பை தர வேண்டுமோ மரபுப்படி என்னென்ன மரியாதை செய்ய வேண்டுமோ அவற்றை செய்ய வேண்டியது ஒரு மாநில அரசின் கடமை என அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பஞ்சாப் விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, "பிரதமர் வருகையையொட்டி, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் ரத்தாகி கடைசி நேரத்தில் சாலை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. திட்டமிட்டிருந்த பாதையை மாற்றி, வேறு பாதையில் பயணித்தது எங்களுக்கு தெரியாது. நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பிரதமர் சென்றது வருத்தம் அளிக்கிறது. பா.ஜ.க. இந்த விவகாரத்தை அரசியலாக்குகிறது" என தெரிவித்தார்.
விசாரணை
இந்தநிலையில் பஞ்சாப் அரசு, பிரதமர் பயணித்த பாதை மறிக்கப்பட்டது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும் மூன்று நாட்களில் இந்த உயர்மட்ட குழு, தனது விசராணை அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணம் ரத்தான நிலையில், அவர் மீண்டும் பஞ்சாப் வருவார் என்று எதிர்பார்ப்பதாக பஞ்சாப் முதலமைச்சர் சரன்ஜித் சன்னி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மன்மோகனை நினைவுகூறும் நெட்டிசன்
பிரதமர் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு என ஒட்டுமொத்த இந்தியாவும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது நடந்த செருப்பு வீச்சு சம்பவத்தை இதனுடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். 2009ம் ஆண்டு தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்தார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். மாநாட்டில் 21 வயதேயான பொறியியல் படிக்கும் மாணவன் ஒருவன் தனது ஷூவை மன்மோகனை நோக்கி வீசினான். அந்த செருப்பு நேராக மன்மோகனுக்கு முன்னால் வந்து விழுந்தது. உடனே அங்கிருந்த காவலர்கள் அந்த மாணவனைப் பிடித்தனர். உடனே பேச்சை நிறுத்திய மன்மோகன்சிங், அந்த மாணவன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டார். அப்போது குஜராத் மாநில முதல்வராக இருந்தது தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி. ஆனால் மன்மோகன் சிங், குஜராத் முதல்வராக இருந்த மோடி மீது இந்த விஷயத்தில் குறை கூறவில்லை. அமைதியாக திரும்பியதை அப்போதே எல்லோரும் பாராட்டினர். இந்த இரண்டு சம்பவங்களையும் இணைத்து இப்போது காங்கிரசார் பேசி வருகிறார்கள். மன்மோகன் சிங் மீது செருப்பு வீசப்பட்ட வீடியோவையும் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள் இணையவாசிகள். அதேநேரம், பாதுகாப்பு குறைபாடுகளை யாராக இருந்தாலும் ஏற்க முடியாது என்பதே பாஜகவினர் வாதம். மன்மோகன் சிங் கூட அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டிருக்க வேண்டும், மாநில அரசும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்பது பாதுகாப்பு துறை சார்ந்தவர்கள் கருத்தாக உள்ளது.