ரஜினியை 'குரு' பார்த்துட்டார்... சினிமாவை விட்டு அரசியலுக்கு இடப்பெயர்ச்சி ஆவாரா
நடிகர் ரஜினிகாந்த் ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை: ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் 30 ஆண்டுகாலமாக அழைத்து வருகின்றனர். அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்குப் பிறகு 2017ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்ததோடு சரி அதன்பிறகு எந்த அசைவும் இல்லை. ரஜினியின் அரசியல் பிரவேசம் நிகழும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்க அவரோ வயதாகி விட்டது என்று கூறி எஸ்கேப் ஆகி வருகிறார். பலரும் ரஜினியை சந்தித்து நலம் விசாரித்தாலும் ஆடிட்டர் குருமூர்த்தி திடீரென பார்த்து பேசியிருக்கிறார். குரு பார்வை ரஜினிக்கு கிடைத்துள்ளதால் அவர் அரசியலுக்கு இடப்பெயர்ச்சி ஆவாரா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், 'நாற்காலிக்கு சண்டை போடும் நாடும் நம் பாரத நாடு' என்று குரு சிஷ்யன் படத்தில் பாடி அரசியலை ஆரம்பித்தார். ராஜாதி ராஜாவில் 'எனக்கு கட்சியும் வேணாம் ஒரு கொடியும் வேண்டாம்' என்று சொன்னார். எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்திலேயே ரஜினிகாந்த் மீது அரசியல் திணிக்கப்பட்டது.
அண்ணாமலை, மன்னன், முத்து, படையப்பா என ரஜினிகாந்த் பல படங்களில் அரசியல் வசனம் பேசி ரசிகர்களிடம் கை தட்டலும் விசிலும் வாங்கி வசூல் மன்னராக திகழ்ந்தார் ரஜினிகாந்த்.
வெடிகுண்டு கலாச்சாரம்
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பாட்சா சினிமா வெற்றி விழாவில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசி ஜெயலலிதாவை அதிர வைத்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் நாடறியும். 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தல் சமயத்தில் இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்று சொல்லி வாய்ஸ் கொடுத்தார். அவரது வாய்ஸ் அப்போது பரபரப்பானது தேர்தலில் அதனை பயன்படுத்தி வெற்றி பெற்றது திமுக.
ரஜினிக்கு அழைப்பு
சினிமாவில் மீண்டும் நடிக்க தொடங்கிய பின்னர் காலம் கடந்து 2017ஆம் ஆண்டு தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் கட்சி எதுவும் தொடங்கவில்லை. இதுவே ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் ஒருவித சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் ட்விட்டர் பதிவு
இந்த சூழ்நிலையில்தான் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது உடல்நிலை குறித்து தெரிவித்திருந்தார். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தனது நிலைப்பாட்டை மக்களிடம் தெரிவிப்பேன் எனவும் ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் கூறினார் . இதனால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் ஆலோசகர்கள்
வயதையும், உடல் நிலையையும் கருத்தில் கொண்டு ரஜினி அரசியலுக்கு வருவதில் இருந்து விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
விட்டர் பதிவிற்குப் பிறகு தமிழருவி மணியன் நேரடியாக ரஜினியின் வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினார். அவர்தான் ரஜினியின் தலைமையில் நல்லாட்சி அமையும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.
குரு மூர்த்தி சந்திப்பு
இந்த சூழலில் ரஜினி அரசியலுக்கு வந்தால் பெரிய மாற்றம் வரும் என்று கூறிவந்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேற்றிரவு திடீரென சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். ரஜினிகாந்துடன் குரு மூர்த்தி நடத்திய ஆலோசனையில் அரசியல் கட்சி துவங்குவதில் தயக்கம் காட்ட வேண்டாம் என்றும், அரசியலுக்கு வாருங்கள் என்றும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குரு மூர்த்தி அறிவுறுத்தல்
தற்போதுள்ள சூழலில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறியுள்ளாராம். எனவே காலம் கடத்தாமல் விரைவில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கும்படி குருமூர்த்தி ரஜினிக்கு அறிவுறுத்தி உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
குரு பார்வையில் ரஜினி
ரஜினியின் உடல்நிலை குறித்து அவரே தெரிவித்துள்ள நிலையில், குருவின் நேரடி பார்வை ரஜினிக்கு கிடைத்துள்ளது. இந்த பார்வை மற்றும் குருவின் சஞ்சாரத்தினால் சினிமாவில் இருந்து அரசியலுக்கு பெயர்ச்சி ஆவாரா ரஜினிகாந்த் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.