தீபாவளித் திருநாள்: புதிய வெற்றிப் பாதையை அமைக்கட்டும் - டிடிவி தினகரன், கேஎஸ் அழகிரி வாழ்த்து
தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்தியுள்ளார்.
சென்னை: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலர் மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்தியுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தமிழக மக்களுக்கு தனது தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும். பெருந்துயரில் இருந்து முழுமையாக மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விரைவில் நனவாகட்டும். வலி தந்த இழப்புகள் மாறி, வலிமையையும் வளங்களையும் இத்திருநாள் கொண்டுவரட்டும். அகத்திலும், புறத்திலும் இருள் அகன்று அனைவரும் ஆனந்தமாக வாழ்ந்திட தீபாவளி நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கே எஸ் அழகிரி வாழ்த்து
இது தொடர்பாக கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒரு மதத்தினர் பண்டிகைகளைக் கொண்டாடும் போது மற்ற மதத்தினர் வாழ்த்துக்களையும் அன்பையும் பகிர்ந்து கொள்வது நம் நாட்டின் கலாச்சாரம். இதில் தீபாவளிக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த 19 மாதங்களாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்களுக்கு இந்த தீபாவளித் திருநாள் நல்வழிகாட்டும் வகையில் அமைய வேண்டும் என்பதே நமது விருப்பம். அனைவருடைய வாழ்விலும் ஏற்றம் உண்டாக வேண்டும் அதர்மம் அழிந்து தர்மம் நிலைக்க தீபாவளித் திருநாள் பாதை அமைத்து கொடுக்கட்டும். ஆனந்தமும் அமைதியும் பெருக அடித்தளமாக தீபாவளி திருநாள் அமையட்டும்.
தீமை மறைந்து நன்மை பெருகும் என்று நம்பிக்கையோடு ஏழை மக்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் தீமைகளை ஒன்றுசேர்ந்து ஒழித்துக் கட்டுவோம் என இந்நாளில் சபதம் ஏற்போம். அறியாமை என்னும் இருளைப் போக்கி வெற்றியையும் மகிழ்ச்சியையும் தீபாவளி கொண்டு வரட்டும். அனைவரும் நேர்மறை சிந்தனையுடன் பணியாற்றும் வாய்ப்பை இந்நாள் வழங்கட்டும்.
Recommended Video
ஓராண்டுக்கும் மேலாக பொருளாதார சீரழிவு, வேலை இழப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு என பல அவதாரங்களை எடுத்து மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் நவீன நரகாசுரனுக்கு முடிவுகட்டும் நாளாக தீபாவளி அமையட்டும். அனைவரும் வாழ்க்கையிலும் இன்முகம் ஒளிரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications