அடகு வைத்த நகை ரசீது தொலைந்துவிட்டதா? ரிசர்வ் வங்கி சொல்லும் அந்த முக்கிய ஆவணம் என்ன தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ நாம் அவசர தேவைக்காக நகையை அடகு வைக்கும் போது நமக்கு ஒரு ரசீது தருவார்கள். இதற்குதான் அடகு சீட்டு என்று சொல்வோம். சில நேரங்களில் எதிர்பாராத விதமாக இந்த அடகு சீட்டு தொலைந்து போக வாய்ப்புண்டு. அப்படி அடகு சீட்டு தொலைந்துவிட்டால் நகையை மீட்டவே முடியாது, நகை கைவிட்டுப் போய்விடும் என்று நிறைய பேருக்கு பயம் ஏற்படும். ஆனால் எந்த பயமும் தேவையில்லை. அடகு சீட்டு தொலைந்தாலும், நகையை எளிதாக மீட்கலாம். எப்படி தெரியுமா?

எப்போதுமே வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் நீங்கள் அடகு வைத்த நகை, உங்களுடைய கணக்கு மற்றும் உங்களது அடையாள ஆவணங்களை எப்போதுமே தங்களது கணினியில் பத்திரமாகப் பதிவு செய்து வைத்திருக்கும்.

Customer inquiring about lost gold loan receipt at bank

அடகு சீட்டு தொலைந்தால்?

அதனால் உங்களிடம் அசல் ரசீது தொலைந்து போயிருந்தாலும் கவலைப்பட தேவையில்லை. வங்கி கேட்கும் ஒருசில சட்டப்பூர்வமான ஆவணங்களையும், அடையாள சரிபார்ப்புகளையும் நீங்கள் சரியாகச் செய்து முடித்து, வங்கியின் விதிமுறைகளை பின்பற்றினால் உங்களுடைய நகையை உங்களிடம் திரும்ப ஒப்படைத்துவிடுவார்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

உங்கள் நகை ரசீது தொலைந்ததுமே, உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்க வேண்டும். உங்களது புகாரின் அடிப்படையில் போலீசார் வழங்கும் எஃப்.ஐ.ஆர் நகல் அல்லது புகாரை பெற்றுக் கொண்டதற்கான சான்றிதழ் மிகவும் முக்கியமானது. இது உங்கள் ரசீது தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க உதவும் அதிகாரப்பூர்வ ஆவணமாகும்.

பொறுப்புறுதி பத்திரம் என்றால் என்ன

இதற்கு பிறகு வங்கியின் விதிமுறைகளின்படி, நீங்கள் ஒரு "பொறுப்புறுதி பத்திரம்" சமர்ப்பிக்க வேண்டும். அதாவது என்னுடைய நகையை நான் பெற்றுக்கொண்ட பிறகு, இந்த தொலைந்துபோன சீட்டை வைத்து எதிர்காலத்தில் யாராவது உரிமை கோரினால் அதற்கு நான் தான் முழுப் பொறுப்பு என்று முத்திரைத்தாளில் எழுதி கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும். இதில் உங்கள் பெயர், கடன் கணக்கு எண், நகையின் விவரங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும்.

அடுத்ததாக நீங்கள் எந்த கிளையில் நகையை அடகு வைத்தீர்களோ, அதே கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டும். அங்கு உங்களை உறுதிப்படுத்திக் கொள்ள உங்கள் அடையாள அட்டை, பான் கார்டு, காவல் நிலைய எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் தயாரிக்கப்பட்ட பொறுப்புறுதிப் பத்திரம் ஆகியவற்றைக் கொண்டு செல்ல வேண்டும்.

தங்க நகை அடகு ஆவணங்கள்

நீங்கள் கொடுத்த ஆவணங்களை வைத்து வங்கி அதிகாரிகள் தங்களின் கணினியில் உள்ள விவரங்களைச் சரிபார்ப்பார்கள். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், நகையின் எடை மற்றும் தரம், கடன் கணக்கு விவரங்கள், உள்முக மதிப்பீட்டு ஆவணங்கள் மற்றும் அடையாளச் சான்று ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து நீங்கள் தான் உண்மையான உரிமையாளர் என்பதை உறுதி செய்வார்கள்.

கூடுதலான சரிபார்ப்பு மற்றும் ஆவண நடைமுறைகளும் இதற்குப் பொருந்தக்கூடும். அதனால் இந்தத் தேவையான நடைமுறைகளைப் பின்பற்றினால் நகையை மீட்கும் செயல்முறையைத் தொடரலாம். அதிகாரப்பூர்வ சரிபார்ப்புகள் முடிந்து, அதற்கான வட்டி மற்றும் இதர நிலுவை தொகைகளை செலுத்திய பிறகு, உள்நாட்டுச் செயல்பாட்டு நடைமுறைகளின்படி உங்கள் நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

அடமானம் வைத்த ரசீது பெற வழி

ஒருவேளை நகையை அடகு வைத்தவர் உயிரிழந்து, அவருடைய அடகு சீட்டும் தொலைந்து போயிருந்தாலும், நகையை மீட்பதற்கு கூடுதல் சட்டப்பூர்வ மற்றும் வாரிசுரிமைச் சரிபார்ப்பு நடைமுறைகள் தேவைப்படும்.

இறந்தவரின் வாரிசுகள் வங்கியை அணுகும் போது, சூழ்நிலையை பொறுத்து வாரிசு சான்றிதழ் (Legal Heir Certificate), Succession Certificate, உயில் உறுதிப்படுத்தல் ஆவணம் (Probate of Will) அல்லது மரண சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கேட்கப்படலாம். இவைகளுடன் வாரிசுகளும் போலீசில் புகார் அளித்து எஃப்.ஐ.ஆர் நகல் மற்றும் பொறுப்புறுதிப் பத்திரத்தை வழங்க வேண்டும்.

வங்கி அதிகாரிகள் வாரிசுகளுடனான உறவுமுறை மற்றும் ஆவணங்களின் உண்மைத்தன்மையை முழுமையாக ஆராய்ந்த பிறகே நகையை ஒப்படைப்பார்கள். சிக்கலான வாரிசுரிமைச் சூழ்நிலைகளில் சட்ட ஆலோசகர்களை அணுகுவது நல்லது.

ரிசர்வ் வங்கி சொல்வதென்ன

இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டப்படி, நகையை எப்படிப் பாதுகாப்பாக வைக்க வேண்டும், நகையின் மதிப்பை எப்படிக் கணக்கிட வேண்டும், ஒருவேளை நகையை ஏலம் விட நேர்ந்தால் அதை எப்படி வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்கு எல்லாம் வங்கிகளுக்குக் கண்டிப்பான விதிகள் உள்ளன.

வாடிக்கையாளர்களின் புகார்களைக் கேட்டுத் தீர்ப்பதற்கும் வங்கிகளில் சிறப்பு வசதி உண்டு. அதனால் ரசீது தொலைந்துவிட்டாலும் வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க வங்கியில் முறையான வழிகள் உள்ளன. இதனால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. நேராக உங்களது வங்கி கிளைக்குச் சென்று, அவர்கள் கேட்கும் ஆவணங்களைக் கொடுத்து உங்கள் நகையைப் பாதுகாப்பாக மீட்டுக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+