ஜெ.வின் அப்பல்லோ சிகிச்சை விவரங்களை சொல்லுங்க… ராதாகிருஷ்ணனை மடக்கிய ஆறுமுகசாமி ஆணையம்
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் விசாரணைக்காக இன்று ஆஜரானார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஆணையத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் டிரைவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 142 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர்களில் சிலரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். சசிகலா தமது வாக்குமூலத்தை வக்கீல் மூலம் கடந்த மாதம் தாக்கல் செய்தார். தற்போது விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந் நிலையில் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற விவரங்கள் அனைத்தும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு தெரியும் என்பதால் அவரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்திருந்தது. அதற்காக, அவர் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி ராதாகிருஷ்ணன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் முழு விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே ஜெயலலிதாவின் வீட்டுப் பணிப்பெண்களான தேவிகா, பூமிகா, சிவயோகம் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.
வருகிற 18-ந்தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும், 20-ந்தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் ஆணையம் முக்கிய விசாரணை நடத்த உள்ளது.