ரொம்ப முக்கியம்! மின் கட்டண உயர்வு.. சென்னையில் தொடங்கிய கருத்துக்கேட்பு கூட்டம்! பங்கேற்பது எப்படி?
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் கடன் சுமையில் உள்ள நிலையில் அதனை சமாளிக்க மின்கட்டண உயர்வை அமல்படுத்த இருக்கிறது.
Recommended Video
இந்நிலையில் இதற்கான உத்தேச கட்டணம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கேட்டு வருகிறது. இன்று சென்னையில் இந்த கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த மின் கட்டண உயர்வு குறித்து ஏற்கெனவே அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்திருந்தார். அதில், "தமிழகத்தில் 2 கோடியே 37 லட்சம் பேர் வீடு மற்றும் குடிசைகளில் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். இவர்களில் 1 கோடி பேருக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை. மேலும், 63 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு 2 ரூபாய் 15 காசுகள் மானியத்தை அரசு தருகிறது. அந்த வகையில், 1 கோடியே 63 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு இந்த கட்டண உயர்வில் எந்த பாதிப்பும் இல்லை. மீதமுள்ளவர்களுக்கு மட்டும்தான் கட்டண உயர்வு. அதுவும் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்வு கிடையாது. மிகச் சொற்பமான உயர்வுதான்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி, 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக செலுத்தும் வகையில் தற்போது கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாதம் 300 முதல் 400 யூனிட் பயன்படுத்துவோருக்கு ரூ.147.50 அதிகரிக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் மனு சமர்ப்பித்துள்ளது. இதையடுத்து, மின் கட்டண உயர்வு தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த 16-ம் தேதி கோவையிலும், 18-ம் தேதி மதுரையிலும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
நிர்வாகம் சரியில்லை.. முதல்வர் உடனே தலையிடனும்.. பொங்கும் ஓபிஎஸ்.. மின் பற்றாக்குறை என எச்சரிக்கை!
இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையிலும் இந்த கூட்டம் இன்று நடைபெறுகிறது. கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டம், மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், காலை 9-10.30 மணிவரை தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இதில் பொதுமக்கள் இந்த கட்டண உயர்வால் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் கட்டண உயர்வுக்கு பதில் மேற்கொள்ள வேண்டிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.
மின்சார வாரியத்தின் கடன் குறித்து ஏற்கெனவே பேசியிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "ஆட்சிப் பொறுப்பிலிருந்து தி.மு.க. 2011-ல் விலகியபோது, மின்சார வாரியத்தின் கடன் 43,493 கோடியாக இருந்தது. அதன்பிறகு அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் இந்த கடன் சுமை 3 மடங்கு அதிகரித்து தற்போது ரூ.1,59,823 கோடியாக இருக்கிறது. அதேபோல ரூ.4,588 கோடியாக இருந்த வங்கியின் வட்டித் தொகை தற்போது ரூ.16,511 கோடியாக உயர்ந்துவிட்டது.
இதுமட்டுமல்ல, 2011-ல் ரூ.18,954 கோடியாக இருந்த வாரியத்தின் நிதி இழப்பு, அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.94,312 கோடியாக உயர்ந்து கடந்த 2021 மார்ச் 30-ந் தேதி ரூ.1,13,266 கோடியாக நிதி இழப்பு அதிகரித்தது. தவிர, 2006-2011 தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் அ.தி.மு.க.வின் ஆட்சியில் உரிய காலத்தில் முடிக்கப்படவில்லை. இதனால் திட்டத்தின் மூலதன செலவுகள், கட்டுமானத்தின் மீதான வட்டி ஆகியவை ரூ.12,647 கோடியாக அதிகரித்துவிட்டது" என தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.