கனமழை எச்சரிக்கை எதிரொலியாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! புதுச்சேரி அமைச்சர் அறிவிப்பு
புதுச்சேரி: நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை குறைந்திருந்தது. இந்தநிலையில் மீண்டும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை (17-11-2025) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று (16-11-2025) இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் கனமழை எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அமைச்சர் நமச்சிவாயம்.
இதேபோல் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 17 ஆம் தேதி கனமழையின் தீவிரத்தைப் பொறுத்து அடுத்தடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications