சென்னையில் கொட்டிய கனமழை: திருமூர்த்தி பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் - கோவிலை மூழ்கடித்த தண்ணீர்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்ததால் குளிர் காற்று வீசியது. திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நள்ளிரவு நேரத்தில் மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்ததால் குளிர் காற்று வீசியது. திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூரில் பேருந்து பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் விட்டு விட்டு பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போல பல ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

மழையால் மாறிய சூழ்நிலை
சென்னையில் நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை பல பகுதிகளில் மழை பெய்தது. அண்ணா நகர், கே.கே. நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அசோக் நகர், வில்லிவாக்கம், அயனாவரம், ராமாபுரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அம்பத்தூர், கொரட்டூர், வளசரவாக்கம், முகப்பேர், வடபழனி, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

வெள்ள நீர்
ஆவடி, பூவிருந்தவல்லி, தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலையோரங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. கடந்த இருநாட்களாக வெயில் சுள்ளென்று அடித்து வந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் பெய்த மழையால் குளுமை பரவியது.

காட்டாற்று வெள்ளம்
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியின் முக்கிய நீர்ப் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு போன்ற பகுதிகளில் இருந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நீர் வரத்து அதிகரிப்பு
திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அடிவாரத்தில் இருக்கும் மும்மூர்த்தி தலமான அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் உண்டியல்கள் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் அருவியின் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கோயில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அருவிக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் மழை
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு
ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், நீலகிரி, கோவையில் இடியுடன் மழை பெய்யக்கூடும் எனவும் ஆகஸ்ட் 27, 28ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications