புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் கனமழையா? புயலா? - புவியரசன் முக்கிய அப்டேட்!
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறுமா என இப்போதைக்கு சொல்ல முடியாது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை: அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பெரிய அளவில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் புவியரசன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 'வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் , ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை கன்னியாகுமரி,திருநெல்வேலி ,தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம் ,நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
திங்கட்கிழமை தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.வருகிற 16 மற்றும் 17ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
வருகிற 16 மற்றும் 17ம் தேதிகளில் மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல இன்று மற்றும் நாளை தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் ,இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரைப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த மண்டலமாக வலுவடையக்கூடும் என்று கூறினார்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் மத்திய கிழக்கு தென் கிழக்கு பகுதியில் நவம்பர் 15ம் தேதி வரை நீடிக்கும். இதனால் இன்று மற்றும் நாளை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்தார்.
அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பெரிய அளவில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் புவியரசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications