வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாறுமா? வானிலை மையம் விளக்கம்!
சென்னை: தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது வேகமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடதமிழ்நாடு நோக்கி இந்த தாழ்வு பகுதி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Recommended Video
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் தீவிர கனமழை பெய்து வருகிறது. அதோடு வங்கக்கடலில் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தீவிர மழை பெய்து வந்தது.
இந்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து விட்டது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலிமை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு வங்கக்கடலில் இன்னொரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே இருந்த தாழ்வு பகுதி வலிமை இழந்த நிலையில் புதிய தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

தாழ்வு பகுதி
இந்த புதிய தாழ்வு பகுதி வேகமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 11ம் தேதி வட தமிழகம் அருகே வரும். இதனால் தமிழ்நாட்டில் மழை தீவிரம் எடுக்கும்.

எப்போது
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் இன்னும் 36 மணி நேரத்தில் அது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். ஆனால் இது புயலாக உருவெடுக்கும் அளவிற்கு போதிய கால அவகாசம் இல்லை. இதனால், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்புகள் இல்லை. இது புயலாக மாற மிக மிக குறைவான வாய்ப்புகளே உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிரம்
இதனால் தமிழ்நாட்டில் நாளையும், நாளை மறுநாளும் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாட்டிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும். சென்னையிலும் தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

கனமழை
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தீவிர மழை பெய்யும். சென்னையில் ஏற்கனவே மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடு முழுக்க ஏரிகள், அணைகள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில்தான் மழை மேலும் பெய்ய வாய்ப்புள்ளதால் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உண்டாகி உள்ளது.

எங்கெல்லாம் மழை பெய்யும்?
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை, கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவள்ளுர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , அரியலூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, நாகை , மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி தீவிர கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வங்க கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.












Click it and Unblock the Notifications