தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை வெளுக்கும் - பத்திரமா இருங்க மக்களே
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளைய தினம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக பல ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. புவனகிரி, பாபநாசம், பெரம்பலூரில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது. தேவாலா, கன்னியாகுமரியில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது. கொடைக்கானல், திருமயம், திருக்கோயிலூரில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. தலைஞாயிறு, கமுதி, எருமைப்பட்டி, முகையூரில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளுர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
11ஆம் தேதி நீலகிரி ,கோயம்புத்தூர் ,சேலம் ,திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நீலகிரி ,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ,சேலம் ,ஈரோடு ,கடலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நாளை மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இன்று முதல் 11 ஆம் தேதி வரை மேற்கு வங்க கடல் பகுதி மன்னார் வளைகுடாப் பகுதி, அந்தமான் கடல் பகுதி உள்ளிட்ட இடங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications