சென்னை புறநகரில் பலத்த காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழை..தணிந்த வெப்பத்தால் மக்கள் மகிழ்ச்சி
சென்னையின் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது.
சென்னை: புறநகர் பகுதிகளான செம்பரம்பாக்கம், திருமழிசை, பூந்தமல்லி, திருவேற்காடு பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் வேளச்சேரி, கிண்டி பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்திருந்தது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பிற்பகல் நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. வேளச்சேரியில் கட்டிடங்கள் வீடுகள் தெரியாத அளவிற்கு பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. இதே போல புறநகர் பகுதிகளாக பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், குன்றத்தூர், திருமழிசையிலும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
அடுத்த 2 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications