300 மரங்கள் வேரோடு சாய்த்து.. 4 உயிர்களை பறித்த மாண்டஸ் பயணம் இப்போ எங்கே? லைவ் லொகேஷன் இதோ
சென்னை: வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை சென்னையையொட்டி கரையை கடந்த நிலையில் தற்போது அரபிக்கடல் நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 10.30 மணி நிலவரப்படி சோளிங்கரையொட்டி நிலைகொண்டுள்ளது.
வங்கக் கடலிலிருந்து சுமார் 12-15 கி.மீ வேகத்தில் மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வந்த மாண்டஸ் நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்தையொட்டிய பகுதியில் கரையை கடந்தது.
புயலின் கண் பகுதி கரையை கடக்கும்போது பெரிய அளவு பாதிப்பு தெரியவில்லை என்றாலும், அதன் வால் பகுதி கடக்கும் போது சுமார் 65-85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது.

பாதிப்பு
காற்றுடன் கன மழையும் பெய்ததால் புயல் சென்ற வழி அனைத்திலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மட்டும் ஒவ்வொரு மண்டலத்திற்கு தலா 25-30 வரை என மொத்தமாக 15 மண்டலங்களில் 300க்கும் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. இதனை அப்புறப்படுத்த சுமார் 5,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல மின்கம்பங்களும் சில இடங்களில் சரிந்ததால் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாகவும், மின்கம்பங்கள் சரிந்த இடங்களில் மட்டுமே மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இப்பகுதிகளில் இன்று மதியத்திற்குள் மின் விநியோகம் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

தாக்கம்
அதேபோல, கடந்த 131 ஆண்டுகளில் சென்னையில் கரையை கடந்த 13வது புயல் இதுவாகும். கடந்த புயல்களை காட்டிலும் இது குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். விமான சேவையை பொறுத்த அளவில், நேற்று 27 விமானங்கள் ரத்தாகி இருந்த நிலையில் இன்று மேலும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் கரை கடந்த பின்னரும் காற்றின் வேகம் இன்று காலை 11 மணி வரை 66 கி.மீ அளவில் இருக்கும் என்பதால் விமான சேவையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து இரவு 8 மணியளவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று சொல்லப்படுகிறது.

வலுவிழப்பு
புயலை பொறுத்த அளவில் சென்னையை நெருங்குவதற்கு முன்னர் தீவிர நிலையிலிருந்து சாதாரண புயலாக வலுவிழந்தது. இதனையடுத்து சென்னையை தொட்டு கரையை கடந்த பின்னர் காலை 10.30 மணி நிலவரப்படி திருத்தணி, சோளிங்கர் என தற்போது நரசிங்கராயன் பேட்டையில் வெறும் காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலைகொண்டிருக்கிறது. இது ஒரே இடத்தில் இல்லாமல் மேற்கு திசையில் அரபிக்கடல் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தற்போது நரசிங்கராயன் பேட்டையில் மணிக்கு 53 கி.மீ அளவில் காற்று வீசி வருகிறது. மாண்டஸ் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இந்த பகுதியை கடந்து வரும் நிலையில், இப்பகுதியில் சுமார் 20 மி.மீ அளவு மழை பெய்யலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில்
இதனையடுத்து ஆந்திராவை கடந்து கர்நாடகாவிற்குள் மாண்டஸ் நுழையும், இவ்வாறு பயணிக்கும் வேலையில் அது மேலும் மேலும் வலுவிழந்துகொண்டே செல்லும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி மாண்டஸ் ஆந்திராவின் ஏலமூரூவுக்கும் தமிழ்நாட்டின் குடியாத்தத்திற்கும் இடையே கடந்து செல்லும். இதனையடுத்து மாலை 4 மணிக்கு தமிழ்நாட்டின் பேர்ணாம்பட்டு பகுதியை கடக்கும். ஆக இப்படியாக இரண்டு நாட்கள் பயணதிற்கு பின்னர் முற்றிலுமா வலுவிழந்து 12ம் தேதியன்று அரபிக்கடலில் கலக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இதன் பாதையை Windy எனும் ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications