மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை.. சட்டத்தை திருத்துமாறு ஹைகோர்ட் யோசனை
சென்னை: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் அருகே அம்பாசிடர் கார் மோதி இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற சண்முகம் என்பவர் படுகாயம் அடைந்தார். தனக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு சண்முகம், மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சண்முகத்திற்கு 39 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டை அதிகரிக்க கோரி சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவிற்கு பதிலளித்த யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம், வாகனம் ஓட்டிச் சென்ற போது சண்முகம் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சண்முகத்திற்கு 39 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பீடு வழங்கிய தீர்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், இந்தியாவில் ஆண்டுக்கு 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் பலியாவதாகவும், அதில் 70 சதவீதம் பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்ற போது இறந்துள்ளார்கள் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருவதாகவும் வேதனை தெரிவித்த நீதிபதி மகாதேவன், மோட்டார் வாகனம் சட்டத்தின் படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டும் வரும் நேரம் இது என யோசனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications