“கோயில் பணத்தில்தான் அரசே இயங்குகிறது.. சிதம்பரம் கோவில் சர்ச்சை.. வார்த்தையை விட்ட காயத்ரி ரகுராம்
சென்னை: "சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது கிடையாதா? கோயில் பணத்தில்தான் அரசு இயங்குகிறது" என பாஜக மாநில தலைவர்களுள் ஒருவரான காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
அதேபோல "ஹிந்து அறநிலையத்துறை கோயில்களை நிர்வாகம் செய்யும் அமைப்பு அல்ல" என்று கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
முன்னதாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் கட்டப்பட்டது அல்ல என கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக தலைவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளனர்.
சென்னையை குறிவைக்கும் மழை..3 நாட்களுக்கு மிக கவனம்.. புயலாக மாறாது..பாலச்சந்திரன் சொன்ன குட் நியூஸ்
எதிர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலின் சொத்துக்கள் மற்றும் நகைகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை, கோயில் நிர்வாகத்தை அணுகி கணக்கு கேட்டபோது இதற்கு தீட்சிதர்கள், "இவ்வாறு கேட்க அறநிலையத்துறைக்கு அதிகாரமில்லை" என்று கூறிவிட்டனர். பின்னர் ஒரு வழியாக 2005-2022 வரை உள்ள சொத்துக்கள் மற்றும் நகைகளை ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டனர். இந்த ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதனை அடுத்து 1950-2005 வரை உள்ள சொத்து மற்றும் நகைகளை ஆய்வு செய்ய அறநிலையத்துறையினர் அணுகியபோது இதற்கும் தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடமை
இந்த ஆய்வுக்கு தற்போது வரை அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, "சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல. மன்னர்களால், நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. கோயில் வருமானங்களை முறையான கணக்கு கேட்கின்றபோது கணக்கு காட்டுவது தீட்சிதர்களின் கடமை. நிர்வாக குளறுபடிகளை கேள்விகளாக கேட்கின்றபோது பதில் அளிப்பது அவர்களுடைய கடமை.
கட்டிடம்
திருக்கோயிலின் உள்ளே மானாவாரியாக அவர்கள் இஷ்டத்திற்கு கட்டிடங்களை கட்டி உள்ளனர். எழுப்பப்பட்டு இருக்கக்கூடிய கட்டிடங்களின் நிலை குறித்து கேள்வி கேட்பதும், கோயிலின் சொத்துக்கள், நகைகள் ஆகியவற்றின் நிலையை ஆய்வு செய்வதும் அறநிலையத்துறையின் கடமை. அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. எங்கள் பணி நியாயத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது" என்று கூறியிருந்தார்.
கண்டனம்
இந்நிலையில் அமைச்சரின் இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காயத்ரி ரகுராம், "சிதம்பரம் நடராஜர் கோவிலைக் கட்டிய அரசனிடம் தலை வணங்கி அவர்களின் ஆட்சியில் இருக்க முடியும். கோவிலைக் கைப்பற்றிய அரசின் கீழ் தலை வணங்கி அடிமைகளாக இருக்க தேவையில்லை. அது மக்களின் கோவில், இன்று பக்தர் மற்றும் கோவில் பணத்தில் அரசு இயங்குகிறது" என ட்வீட் செய்துள்ளார். அதேபோல, "கோவில்கள் ஹிந்து அறநிலைய துறையை சார்ந்தது அல்ல. ஹிந்து அறநிலய துறை கோவில்களை நிர்வாகம் செய்யும் அமைப்பு அல்ல, கோவில் நிர்வாகங்களில் ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை மேற்பார்வையிடும் அமைப்பு மட்டுமே" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ட்வீட் செய்திருக்கிறார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து அமைச்சர் கூறியிருந்ததும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் கருத்து தெரிவித்திருப்பதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.