டாக்டர் அறையில் மதுபானம்.. மருத்துவமனையா? மது விடுதியா? வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பிய எச் ராஜா
சென்னை: சிவகங்கை மாவட்டம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது பாட்டில், நொறுக்குத் தீனிகள் இருந்த வீடியோ வைரலான நிலையில், நோயாளிகளை கவனிக்காமல் மருத்துவமனையிலேயே புத்தாண்டுப் பார்ட்டி நடக்கிறதா? மருத்துவமனையா? மதுபான விடுதியா? என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புத்தாண்டு அன்று நள்ளிரவில் மருத்துவர் இல்லை என்றுக்கூறி நோயாளியை வெளியில் அனுப்பி உள்ளனர். சந்தேகம் அடைந்த நோயாளி தரப்பினர் மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சைப்பகுதியில் உள்ள மருத்துவர் அறைக்கு சென்று பார்த்த போது மருத்துவர் அறையில் இருந்த கட்டில் மீது உயர் ரக மதுபான பாட்டில், சிக்கன் துண்டுகள், நொறுக்குத் தீனிகள் இருந்துள்ளன.

இதையடுத்து பணியில் இருந்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோவை பகிர்ந்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அறையில் மது பாட்டில் மற்றும் நொறுக்குத் தீனிகள் நிறைந்திருந்த காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. மருத்துவமனையில் இரவு நேர மருத்துவ பணியாளர்கள் ஒருவர் கூட இல்லை என செய்திகள் வருகின்றன.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் பள்ளிக்கூட வளாகம் தொடங்கி மருத்துவமனை வரை போதை பரவலாக்கல் தொடர்வது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களும் பதிலளிப்பார்களா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications