"விக்கெட் காலி?".. பெரிய மீனை தூண்டில் போட்டு தூக்குகிறதா பாஜக.. தினகரன் சைலண்ட் வேற.. என்ன நடக்குது
தஞ்சையின் கிருஷ்ணசாமி வாண்டையார் பாஜகவில் சேர போவதாக தகவல்கள் பரவி வருகின்றன
சென்னை: காங்கிரஸ் முக்கிய தலைவர், பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் சம்பந்தி கிருஷ்ணசாமி வாண்டையார்.. தினகரன் தன்னுடைய மகளுக்கு, பூண்டி துளசி வாண்டையாரின் பேரனை திருமணம் செய்து வைத்துள்ளார்..
2 வருடங்களுக்கு முன்பு, துளசி ஐயா வாண்டையார் குடும்பத்து சம்பந்தம் என்றதுமே, தினகரன் இந்த விஷயத்தை அன்றே ஜெயிலில் இருந்த சசிகலாவிடம் சொன்னாராம்.. அதற்கு சசிகலா, "சந்தோஷமான விஷயம், மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி தினகரனை உற்சாகப்படுத்தினாராம்..
பூண்டி வாண்டையார்
பூண்டி வாண்டையாரின் குடும்பம் என்றாலே, தஞ்சை ஜில்லாவில் பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.. துளசி ஐயா வாண்டையாரை பொறுத்தவரை, தீவிரமான காங்கிரஸ்காரர்.. அக்கட்சி சார்பில் தஞ்சையில் போட்டியிட்டு எம்பியாகவும் இருந்தவர். அவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார், அப்படியே தந்தையின் வழியில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். இப்போதுகூட கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராகத்தான் இருக்கிறார்.
கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதன் வாண்டையார்.. இவரும் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்... இப்படி குடும்பமே காங்கிரஸ் கட்சியின் மீது ஈடுபாடு கொண்டவர்கள்.. இப்போது விஷயம் என்னவென்றால், இந்த அளவுக்கு காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க நபர், பாஜகவில் சேர போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.. அதுவும் கடந்த வாரம் அமித்ஷா சென்னை வந்தபோது, இப்படி ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.. இதற்கு காரணம், டிடிவி தினகரன் சமீபகாலமாகவே, பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருவதுதான்.
சம்பந்தி தினகரன்
கிட்டத்தட்ட பாஜக தலைவர் போலவே, தினகரனும் பேச ஆரம்பித்துவிட்டார்.. எப்படியும் பாஜகவுடன்தான் கூட்டணி அமைக்க போகிறார் என்ற அனுமானங்களும் பலமாக வலம்வரும்நிலையில், அவரது சம்பந்தியும் பாஜகவில் இணைய வாய்ப்பிருக்கும் என்றும் யூகிக்கப்பட்டது.. இந்தியா சிமெண்ட் நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த அமித்ஷாவை முக்கிய பிரமுகர்கள் பலர் சந்திக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவரான கிருஷ்ணசாமி வாண்டையாரும் அமித்ஷாவை சந்தித்து, அப்போதே அந்த நிமிடமே பாஜகவில் சேர இருப்பதாக தகவல் வெளியானது.
பொன்.ராதா
ஆனால், கிருஷ்ணசாமி இதை அன்றைய தினமே மறுத்தார்.. ஒரு தனியார் சேனலுக்கு தந்திருந்த பேட்டியில், "சென்னையில் அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் சேர இருப்பதாக வரும் தகவல் வதந்தி... நான் இப்போது தஞ்சாவூரில் இருக்கிறேன்.. ஆனால், முன்பு ஒருமுறை பொன்.ராதாகிருஷ்ணன் எனக்கு அழைப்பு விடுத்தார்... நான் மறுத்து விட்டேன்... இப்போது யாரும் என்னை பாஜகவில் சேரும்படி கூப்பிடவும் இல்லை. நான் பாஜகவுக்கு போக போவதும் இல்லை.. ராகுல் காந்தி நடைபயணத்தில் பங்கேற்ற தொண்டர் கணேசன் என்பவர் விபத்தில் உயிரிழந்து விட்டார்... அவருடைய உடல் இன்று மாலை வருகிறது... அந்த இறுதிச் சடங்கிற்கான ஏற்பாட்டில் இருக்கிறேன்" என்று சொல்லி அந்த வதந்திக்கு அழுத்தமான முற்றுப்புள்ளியை அன்றே வைத்தார்.
கங்கு நெருப்பு
எனினும், இந்த வதந்தி நெருப்பு இன்னமும் சுற்றிக் கொண்டே இருக்கிறது.. யார் இந்த நெருப்பை பற்ற வைத்தார்கள் என்று தெரியவில்லை.. வரும் ஜனவரி மாதம் கிருஷ்ணசாமி வாண்டையார் பாஜகவில் இணையப் போவதாக மறுபடியும் சோஷியல் மீடியாக்களில் அனலடிக்க துவங்கிவிட்டது. இதற்கு மறுபடியும் கிருஷ்ணசாமி விளக்கம் தந்துள்ளார்.. "நான் பாஜகவில் இணைவதாக பரவும் செய்தியை பலமுறை மறுத்துவிட்டேன்.. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது" என்று சொல்லி உள்ளார்.. ஆனாலும் தஞ்சாவூரில் அரசியல் சலசலப்பு குறையவேயில்லை..
ஹாட் தஞ்சை
மாற்று கட்சியில் உள்ளவர்களுக்கு வலையைவீசி, தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது.. விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், இந்த வியூகங்கள் அதிகமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன.. எனவேதான், இதுபோன்ற கட்சி தாவல்கள் முணுமுணுப்புகளும், புரளிகளும் உடனடியாக அடங்குவதில்லை.. ஒருவேளை, காங்கிரஸை கலங்கவைக்க, வேண்டுமென்றே இப்படியெல்லாம் கிளப்பிவிடப்படுவதாக கூறுகிறார்கள்.. பாஜகவுடன் தினகரனுடன் இணக்கமாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவரது சம்பந்தி பாஜகவில் சேரப் போவதாக வரும் செய்திகளை பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது தஞ்சை அரசியல் வட்டாரம்..!!