“சென்னை + வட தமிழ்நாடு அலர்ட்”.. 5 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும்.. வெதர்மேன் வார்னிங்!
சென்னை: "வட தமிழ்நாட்டில் 2 நாட்கள் அதிகமான வெப்பம் காணப்படும். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும்." என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், "ராயலசீமா, உள் கர்நாடக பகுதிகளில் இருந்து வெப்ப அலை தமிழ்நாட்டை நோக்கி வர வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரண்டு நாட்கள் வெயில் கடுமையாக இருக்கும். மேலும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு வெப்பம் கடுமையாக இருக்கும்.

வட தமிழ்நாட்டில் ஏப்ரல் 11, 12 ஆகிய தேதிகளில் வெப்பம் கடுமையாக இருக்கும். சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. குறிப்பாக வேலூரில் அதிகபட்சமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க செய்ய வேண்டியவை மற்றும் வெளியில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு நன்னீர் குடிக்க வேண்டும், தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
பயணங்களின்போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓ.எஸ்.ஆர், எலுமிச்சை ஜூஸ், இளநீர், வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்ஸி, பழைய சாதம் நீர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்கவும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தவரை வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
வெளியில் செல்லும்போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும். மதிய நேரத்தில் வெளியில் செல்லும் போது கண்ணாடி மற்றும் காலனி அணிந்து, குடையுடன் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். மயக்கம் அல்லது உடல் நலக்குறைவினை உணர்ந்தால் உடனே மருத்துவரை அனுக வேண்டும்.












Click it and Unblock the Notifications