தரையிறங்கிய நேரத்தில் வந்த தடங்கல்.. முகம் மாறிய விஞ்ஞானிகள்! கடைசி நொடியில் இடத்தை மாற்றிய லேண்டர்
சென்னை: இந்தியாவின் இஸ்ரோ மூலம் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் களமிறங்கி உள்ளது. இந்த விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கிய தருணத்தில் முதலில் இறங்க வேண்டிய இடம் சரியில்லாத காரணத்தால் அருகிலேயே இருந்த இன்னொரு இடத்தில் தரையிறங்கியது.
சந்திரயான் 3 திட்டத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய நொடிகளை இன்று இந்தியாவே உற்று பார்த்து வந்தது. இதில் கடைசி சில நொடிகளில் விக்ரம் லேண்டர் ஆட்டோமேட்டிக்காக இயங்கியது. அதாவது இஸ்ரோ கண்ட்ரோல் ரூமில் இருந்து எந்த மெசேஜும் செல்லாமல் சுயமாக விக்ரம் லேண்டர் இறங்கியது.

எப்படி இறங்கியது?: இன்று மாலை 5.45 மணிக்கு விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. லேண்டர் மாடுல் நிலவை நோக்கி இறக்கப்பட்டது. ரஃப் பிரேக்கிங் மற்றும் ஆல்டிடியூட் ஹோல்ட் கட்டம் மூலம் இந்த விக்ரம் களமிறக்கப்பட்டது. அதாவது திரஸ்டர்கள் (4ல் இரண்டு இயங்கும்) பிரேக் போல செயல்பட்டு இதை இறக்கியது. இதன் மூலம் 30 கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டு இருந்து லேண்டர் கொஞ்சம் கொஞ்சமாக தரையிறக்கப்பட்டது. 11.5 நிமிடத்தில் விக்ரம் லேண்டர் 7.4 கிமீ உயரம் வரை கொண்டு வரப்பட்டது. 1.68km கிமீ / நொடி என்ற வேகத்தில் இந்த லேண்டர் இறங்கியது. அதன்பின் ஆல்டிடியூட் ஹோல்ட் கட்டம் மூலம் இதன் உயரம் 6.5 கிமீ உயரம் வரை குறைக்கப்பட்டது.
அதன்பின் இதன் உயரம் மேலும் ஏஎல்எஸ் எனப்படும் ஆட்டோமேட்டிக் லேண்டிங் சிஸ்டம் மூலம் திரஸ்டர்கள் உதவியுடன் குறைக்கப்பட்டது. இந்த கட்டத்தில் விக்ரம் லேண்டர் ஆட்டோமேட்டிக் முறையில் இறங்கியது. இதில் இஸ்ரோ எந்த கமெண்டும் கொடுக்கவில்லை. 3 நிமிடங்கள் இது தொடர்ந்தது. 800 மீட்டர் உயரத்தை அடையும் அடையும் வரை கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் திரஸ்டர்கள் உதவியுடன் இதன் உயரம், வேகம் குறைக்கப்பட்டு ஏஎல்எஸ் மூலம் லேண்டர் மேலும் கீழே இறக்கப்பட்டது.
கடைசியாக 10 மீட்டர் உயரம் இருக்கும் வரை விக்ரம் உயரம் குறைக்கப்பட்டு வந்தது. இந்த பணிகளுக்கு இடையிலேயே கேமரா உதவியுடன் நிலவில் எங்கே இறங்க வேண்டும் என்று லேண்டர் கண்டுபிடித்தது.
இடத்தை மாற்றிய கேமரா: முதலில் கண்டுபிடிக்கப்பட்ட லோகேஷன் சரியில்லை என்பதால் இரண்டாவதாக மீண்டும் லோகேஷனை தேடியது. அந்த நொடியில் விஞ்ஞானிகள் முகத்தில் டென்ஷன் ரேகை படர்ந்தது. நல்ல வேளையாக இடர் இல்லாத இடமாக பார்த்து விக்ரம் நகர்ந்து தரையிறங்க ஆரம்பித்தது. செயற்கை நுண்ணறிவு செயல்திறன் மூலமாக இது சாத்தியப்பட்டது. நல்லவேளையாக, இரண்டாவதாக கண்டுபிடித்த இடத்தில் விக்ரம் லேண்டர் இறங்கியது. 10 மீட்டர் உயரம் வரை கொண்டு செல்லப்பட்ட லேண்டர் அங்கிருந்து ப்ரீ பாலிங் மூலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இடர்வுணர் ஆபத்து தவிர் என்ற செயற்கை நுண்ணறிவு சரியாக வேலை செய்ததால் இடரை களைந்து சரியான இடத்தில் விக்ரம் காலடி எடுத்து வைத்துள்ளது. ஏனெனில் நிலவில் சில இடங்களில் பெரிய கல் இருக்கும். அல்லது பள்ளம் இருக்கும். அந்த பள்ளத்துக்கு உள்ளே லேண்டரின் கால் போனால் அந்த விண்கலம் சாய்ந்துவிடும். அதே மாதிரி கல் மீது கால் பட்டாலும் சாய்ந்துவிடும். இதை தவிர்த்துள்ளது விக்ரம்.
எப்படி நடந்தது?: சந்திரயான் 2 லேண்டரில் 5 திரஸ்டர்கள் இருந்தன. ஒன்று செயல்படாமல் போனால் பாதுகாப்பிற்கு 5வதாக ஒரு திரஸ்டர் சந்திரயான் 2 லேண்டரில் இருந்தது. ஆனால் கூடுதல் திரஸ்டர்கள் இருப்பது கூடுதல் எடையை ஏற்படுத்தி விபத்திற்கு காரணமாக இருப்பதால் சந்திரயான் 3ல் உள்ள லேண்டரில் 4 திரஸ்டர்கள் மட்டுமே உள்ளன.
முன்பு சந்திராயன் 2ல் எல்லா திரஸ்டர்களும் ஒரே நேரத்தில் கீழே இறங்கும் போது இயங்கும். ஆனால் சந்திரயான் 3ல் முதலில் 2 திரஸ்டர்கள் செயல்படும். அவை செயல் இழக்கும் பட்சத்தில் மற்ற 2 திரஸ்டர்கள் இயங்கும். அப்படித்தான் இன்று திரஸ்டர்கள் திட்டமிடப்பட்டபடி இயங்கியது.
கேமரா இருக்கும்: முன்பு சந்திரயான் 2 சிக்னல்களை மட்டுமே பூமிக்கு அனுப்பும். இதை வைத்தே ரோவர் சரியாக செல்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடித்தோம். ஆனாலும் சிக்னல் போனால் ரோவருக்கு என்ன ஆனது என்று தெரியாது. மாறாக சந்திரயான் 3ல் கேமரா இருக்கும். இவை ஒவ்வொரு மீட்டருக்கும் புகைப்படம் எடுத்து அனுப்பும்.
இதனால் ரோவர் எங்கே செல்கிறது எப்படி செல்கிறது என்று தெரியும். அதோடு நிலவின் தரைப்பகுதியில் பெரிய கல் இருந்தால் ரோவரை தள்ளி நகர்ந்து தரையிறங்க வைக்க முடியும். கேமரா மூலம் ரோவரை இனி சிறப்பாக கணிகாணிக்க முடியும். இந்த முறை சந்திரயான் 3ல் உள்ள சென்சார் மற்றும் கேமரா காரணமாக பாறைகளை தவிர்த்துவிட்டு சமதளத்தில் ரோவர் களமிறங்க முடியும். அப்படித்தான் இன்றும் நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்து உள்ளது.
எங்கே களமிறங்கும்?: நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தரையிறங்கும். 2 கிமீ வேகத்திற்கும் குறைவாக இது தரையிறங்கும்.கடைசி 10 மீட்டரில் தொப்பென்று விழும் வகையில் இந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கும். தரையிறங்கிய பிறகு, லேண்டர் 14 பூமி நாட்களுக்கு (ஒரு சந்திர நாள்) மேற்பரப்பில் பொருட்களை இந்த ரோவர் சேகரிக்கும்.












Click it and Unblock the Notifications