"அண்ணே ஏமாத்திட்டாரு".. ஓபிஎஸ் போட்ட வலை.. கொத்தாக "சிக்கிய" 200 பேர்.. எடப்பாடியே எதிர்பார்க்கல!
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்கும் பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளை கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கம் இழுக்கும் பணியில் ஓ பன்னீர்செல்வம் டீம் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில், பல்வேறு நிர்வாகிகள் எங்கள் பக்கம் வர போகிறார்கள் பாருங்கள் என்கிறார்கள் நம்பிக்கையாக! அப்படி என்ன நடந்தது?
அதிமுகவில் பொதுக்குழுவில் நினைத்தபடியே இடைக்கால பொதுச்செயலாளர் ஆகி எடப்பாடி பழனிசாமி சாதித்துவிட்டார். அதோடு முறையாக தேர்தலை சந்தித்து நிரந்தர பொதுச்செயலாளர் ஆகும் திட்டத்திலும் அவர் இருக்கிறார்.
இன்னும் 4 மாதங்களில் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

நியமனம்
அதன்படி அதிமுக துணைப்பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அதிமுகவின் தலைமை கழக செயலாளராக வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இது எடப்பாடி பழனிசாமி வகித்த பதவி ஆகும். இது போக தலைமை கழக உறுப்பினர்கள் பலரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் தென் மாவட்ட நிர்வாகிகள், டெல்டா நிர்வாகிகள், முக்குலத்தோர் நிர்வாகிகள் பலர் ஓரங்கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆதரவு இல்லை
இதன் காரணமாக முக்குலத்தோர் நிர்வாகிகள் பலர் கட்சிக்குள் அப்செட்டில் இருக்கிறார்களாம். எங்களுக்கு பெரிதாக பதவிகள் கொடுக்கப்படவில்லை. அண்ணே ஏமாத்திட்டாரு. தலைமை கழகத்தில் எங்கள் ஆட்களுக்கு பதவிகள் இல்லை. எங்களுக்கும் முழு உரிமை கொடுக்கப்படும் என்று நினைத்துதான், ஓபிஎஸ் பக்கம் கூட செல்லாமல் இங்கே வந்தோம். ஆனால் இப்போது பதவியில் நாங்கள் ஓரம்கட்டப்பட்டுவிட்டோம் என்ற புலம்பல்கள் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கேட்க தொடங்கி உள்ளன.

டெல்டா ஆதரவு திரட்ட முடிவு
இந்த நிலையில்தான் எடப்பாடி வெளியிட்ட அறிவிப்பில் பதவி கிடைக்காத நிர்வாகிகளை தேடி தேடி ஓ பன்னீர்செல்வம் தரப்பு பேசி வருகிறதாம். பல முக்குலத்தோர் தலைவர்களுக்கு தலைமை கழகத்தில் இடம் கொடுக்கப்படவில்லை. இதை காரணமாக வைத்து.. எங்க பக்கம் வந்துடுங்க. நாங்கள் பதவி கொடுக்கிறோம். எப்படியும் தேர்தல் ஆணையம் பொதுக்குழு செல்லாது என்று சொல்லிவிடும். இப்போதே வந்துவிடுங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறதாம்.

முக்குலத்தோர்
அதோடு அதிமுகவில் அதிகாரபூர்வமாக இல்லாத வேறு ஒரு முக்குலத்தோர் தலைவரும் இதற்கு பின் "கேன்வாஸ்" செய்து வருகிறாராம். ஓபிஎஸ் கையை நீங்கள்தான் வலுப்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் அவர் பக்கம் நிற்க வேண்டும் என்றால் நிர்வாகிகள் அவருடன் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு பதவி கிடைக்கும். இல்லையென்றால் கொங்கு நிர்வாகிகளுக்கு மட்டும்தான் பதவி கிடைக்கும், என்று அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறதாம்.

200 பேர்
இந்த தொடர் பேச்சுவார்த்தைகள் காரணமாக முத்துப்பேட்டையில் நேற்று 200 பேர் அப்படியே எடப்பாடி டீமில் இருந்து ஓ பன்னீர்செல்வம் டீமிற்கு தாவினர். இதில் 30 பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்று கூறப்படுகிறது. இதை எடப்பாடி தரப்பே எதிர்பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. பெரும்பாலானோர் முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த சொந்தங்கள் ஆவர். இரண்டு நாட்களாக இவர்களிடம் பேசிய பேச்சுவார்த்தைகள் காரணமாக தற்போது ஓ பன்னீர்செல்வம் அணிக்கு இவர்கள் தாவியதாக கூறப்படுகிறது.

டீசர்தான்
அதோடு இது வெறும் டீசர்தான் டெல்டாவில் இன்னும் பல அணி தாவல்கள் நடக்கும்.பல நிர்வாகிகள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் தாவுவார்கள். முக்கியமாக முக்குலத்தோர் பிரிவை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களுடன் ஓ பன்னீர்செல்வம் பேசி வருகிறார். ஒரு 6-7 பேர் ஓ பன்னீர்செல்வம் பக்கம் வந்தாலே போதும். சட்டசபையில் தனியாக செயல்பட முடியும். சின்னத்தை முடக்கவும் இது வசதியாக இருக்கும், என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு நம்பிக்கையாக இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications