"முதல்வர் போஸ்டர்".. விசாரிக்க போனால்.. அடுத்தடுத்து வெளியான "பூதம்".. அண்ணாமலை பிஏ சிக்கியது எப்படி
சென்னை: முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் எப்படி கைது செய்யப்பட்டார்? அவரை போலீஸ் கண்டுபிடித்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் குறித்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 11ம் தேதி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த போஸ்டர்கள் ஊடகம் ஒன்றின் அட்டைப்படம் போல வடிவமைக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் குறித்து வெளியாகாத ஒரு செய்தியை வெளியானது போல வடிவமைப்பு செய்து பல இடங்களில் போஸ்டர்களாக ஒட்டி இருந்தனர்.
திமுகவினர் இடையே இந்த போஸ்டர் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக சார்பாக இதற்கு எதிராக புகாரும் கொடுக்கப்பட்டது. துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் இதற்கு எதிராக போலீசில் புகார் கொடுத்தார்.

போஸ்டர்கள்
சென்னையில் தற்போது சிங்கார சென்னை திட்டம் செயலில் உள்ளது. இதன் காரணமாக மாநகராட்சி இடங்களில் போஸ்டர் ஒட்ட கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதால் சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார் என்பவரும் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். எஸ்பிளனேடு போலீஸ் ஸ்டேஷன் சார்பாக வழக்கு பதியப்பட்டு விசாரணை செய்யப்பட்டது,

விசாரணை
விசாரணையில் அங்கு சுவரொட்டியை ஒட்டியது பிலிப்ராஜ் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில்தான் முதல் பூதம் வெளியானது. அவர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர். அதோடு அவருக்கு எதிராக கொலை வழக்கும் முன்பே இருந்துள்ளது. 2000ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் வழக்கில் முக்கிய குற்றவாளி இவர்தான். அவரை போலீஸ் கைது செய்த போது அவரின் வீட்டில் முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் அந்த போஸ்டர்கள் பல இருந்துள்ளன.

முதல் பூதம்
யார் இந்த போஸ்டரை ஒட்ட சொன்னது என்று போலீசார் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் எனக்கு போஸ்டரை கொடுத்தது இந்து ஜனநாயக முன்னணியை சேர்ந்த சென்னை மாநகரச் செயலாளர் சத்தியநாதன் என்பவர்தான் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரணை செய்ததில்.. இன்னொரு பூதம் வெளியாகி உள்ளது. அதன்படி அவர்.. ஏற்கனவே பல வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்ததற்கு எதிராக தாக்குதல் நடத்திய வழக்கு, கி வீரமணி வீட்டை முற்றுகையிட்ட வழக்கில் எல்லாம் இவர் கைதாகி, பெயிலில் வந்துள்ளார்.

இரண்டாவது பூதம்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை, அவர் சிவகுருநாதன் என்ற நபரின் பெயரை சொல்லி இருக்கிறார். அவரும் பல்வேறு ஜாதி கலவர வழக்குகளில் சிக்கி உள்ளார். 2014ல் இவர் ஜாதி கலவர வழக்கில் கைதும் செய்யப்பட்டு உள்ளார். மூன்று பேருமே ஏற்கனவே பல குற்றங்களை செய்துள்ள நிலையில் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்துள்ளனர். நேற்று முதல்நாள் நடந்த விசாரணையில்தான் அடுத்த பூதம் வெளியாகி உள்ளது. இந்த விசாரணையின் முடிவில் பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் சொல்லித்தான் இப்படி போஸ்டர்களை ஒட்டியதாக அவர்கள் 3 பேரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் .

உதவியாளர் கைது
அதில் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன்தான் எங்களிடம் இப்படி போஸ்டர் ஒட்ட சொன்னார். போஸ்டரை அச்சடித்து கொடுத்தது அவர்தான். ஊடகம் ஒன்றில் அண்ணாமலைக்கு எதிராக அட்டைப்படம் வந்து சர்ச்சையானது. அதை போலவே பொய்யான போஸ்டரை முதல்வரை விமர்சித்து அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இப்படி அடித்து, எங்களிடம் ஒட்ட சொன்னார். இதற்காக 35 ஆயிரம் ரூபாயை அவர் எங்களிடம் கொடுத்தார் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகனை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications