மொத்தமா பிடிச்சிட்டாரு எடப்பாடி.. பன்னீர் சறுக்கிய இடம் இதுதான்.. இனி அதிமுகவில் அசைக்க முடியாது!
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் ஆளும் திமுகவை விமர்சிக்காமல் மென் போக்கை கையாண்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தி.மு.கவை கடுமையாக விமர்சித்து வருவதே அவருக்கு ஆதரவாளர்கள் பெருகக் காரணம் எனக் கூறப்படுகிறது.
பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதுமே திமுகவுக்கு எதிராக தனது முழுவேக சாட்டை வீச்சைத் தொடங்கிவிட்டார்.
அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களின் பல்ஸை பிடித்து, தொண்டர்கள் விரும்பும் வகையில், திமுகவை கடுமையாக விமர்சித்து, தன்னை முன்னிறுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இதில் தான் ஓபிஎஸ் பின்தங்கி விட்டார்.

ஓபிஎஸ் மீதான விமர்சனம்
பொதுவாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஓ.பன்னீர்செல்வம் மீது வைக்கும் முக்கியமான விமர்சனம், அவர் எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சிக்காமல் மென்மையான போக்கை கடைபிடிக்கிறார் என்பதே. திமுக அரசை விமர்சிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும், மேலோட்டமாக ஜிகினா வார்த்தைகளால் அறிக்கை வெளியிடுவதோடு சரி, எடப்பாடி பழனிசாமி போல மேடைகளில், கூட்டங்களில் திமுக அரசை விளாசி எடுப்பது ஓ.பன்னீர்செல்வத்திற்கு கைவரவில்லை என்பது தொண்டர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

ஆதரவு இல்லை
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இத்தனை ஆண்டுகளாக பணியாற்றி இருந்தும், ஜெயலலிதாவால் முதல்வர் ஆக்கப்பட்ட பெருமை இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் ஆதரவாளர்கள் வெகுவாகக் குறைந்ததற்குக் காரணம், ஓ.பி.எஸ்ஸின் நடவடிக்கைகளால் அவர் மீது நம்பிக்கை இழந்து எதிர்கால நலன் கருதி முக்கிய நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்ததே. எடப்பாடி பழனிசாமி போல, வலிமையாக ஓ.பன்னீர்செல்வம் எந்த நிலைப்பாட்டிலும் நிற்காதது ஓபிஎஸ்ஸின் பெரிய பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. அதில்தான் கெட்டியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

எதிரெதிர் முனைகள்
திமுகவும், அதிமுகவும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி புரிந்து வருகின்றன. கொள்கை அடிப்படையில் இரு கட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் கூட இரு கட்சிகளும் நேருக்கு நேர் எதிரிகளாகவே இத்தனை ஆண்டு காலமாக அரசியல் களத்தில் திகழ்ந்து வருகின்றன. அந்த மோதல் போக்கே, தமிழகத்தில் வேறு கட்சிகள் வளர்ந்துவிடாமல் இந்த இரு திராவிடக் கட்சிகளையும் ஆக்டிவ் மோடிலேயே வைத்திருக்கிறது.

தொண்டர்கள் விருப்பம்
திமுக என்றால் அதிமுகவை கடுமையாக விமர்சிக்க வேண்டும், அதிமுக தலைவர்கள் திமுகவை விமர்சிக்க வேண்டும், இதையே இரு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களும் விரும்புகிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதா காலம் தொடங்கி இன்றளவும் அந்த நிலையே இருந்து வருகிறது. இதில் தான் ஓ.பன்னீர்செல்வம் சறுக்கலைச் சந்திக்கிறார். ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசையோ, முதல்வர் ஸ்டாலினையோ கடுமையாக விமர்சிப்பதே இல்லை.

குற்றச்சாட்டு
போதாக்குறைக்கு, ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு, திமுக அரசைப் பாராட்டியது, ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தில், ஸ்டாலினுடன் ஓபிஎஸ் பங்கேற்றது போன்றவை ஓபிஎஸ், திமுக அரசுடன் இணக்கமான உறவைக் கையாண்டு வருவதான தோற்றத்தை தொண்டர்களுக்கும் ஏற்படுத்திவிட்டது. இதையொட்டித்தான், ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக அரசு உதவி செய்து வருவதாக வெளிப்படையாகவே குற்றம்சாட்டத் தொடங்கினார்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்.

பல்ஸை பிடித்த எடப்பாடி
தொண்டர்களின் எண்ண ஓட்டத்தை அறிவதில் ஓபிஎஸ் தவறவிட்ட இடத்தை வலுவாகப் பிடித்துக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி, திமுக அரசையும், ஸ்டாலினையும், ஸ்டாலின் குடும்ப ஆதிக்கத்தையும் பொதுக்கூட்டங்களில் புரட்டி எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதுவே, தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை வைப்பதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

குறிவைத்து
ஆனால், மறுபக்கம் ஓ.பன்னீர்செல்வமோ, திமுகவுடன் தன்னை இணைத்து கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குக் கூட கடுமையான எதிர்வினையை ஆற்றவில்லை. இது தொண்டர்கள் மத்தியில் ஓபிஎஸ் மீதான அதிருப்தி வலுப்பெறுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. இதை பக்காவாக பிடித்துக்கொண்ட அதிமுகவின் முன்னணி தலைவர்கள் பலரும், அதைப் பற்றியே குறிவைத்துப் பேசி, ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு கூடாமல் பார்த்துக்கொண்டனர்.

பழைய பழனிசாமி இல்ல
பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மேடையிலும், திமுக தாக்குதலையே பயன்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி. பன்னீர்செல்வத்தை விமர்சிப்பது ஒரு புறம் இருந்தாலும், திமுகவையும் துளைத்து எடுத்தார். தி.மு.கவின் கைக்கூலி ஓ.பன்னீர்செல்வம் என்றும், ஓ.பன்னீர்செல்வமும், ஸ்டாலினும் இணைந்து தலைமைக் கழகத்தில் வன்முறையை நிகழ்த்தியுள்ளார்கள். என்னை பழைய பழனிசாமி என நினைத்துவிட்டீர்களா? எங்களை அழிக்க நினைப்பவர்கள் அடியோடு அழிந்து விடுவார்கள். காலத்தின் சக்கரம் மீண்டும் மேலே வரும். கீழே உள்ள சக்கரம் மேலே வந்தால் என்ன ஆகும் என்பது ஸ்டாலினுக்கு ஞாபகம் இருக்கட்டும்" என வெடித்தார் ஈபிஎஸ்.

விடாத பழனிசாமி
ஓ.பி.எஸ் பஞ்சாயத்தில் திமுகவை ஏன் வீணாக எடப்பாடி பழனிசாமி சீண்டுகிறார் என்ற கேள்வி பொதுவெளியிலேயே எழுந்தது. ஆனால், அது வீணான காரியம் அல்ல, அதிமுகவின் அடித்தளமே அதுதான் என்பதை உணர்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. திமுகவை எதிர்த்துத் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக. ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும், திமுக மீதான வெறுப்பு இருக்கிறது. அதுவே அதிமுகவை இத்தனை முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி இருக்கிறது. தொண்டர்களின் பல்ஸை புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி திமுகவை செல்லும் இடமெல்லாம் விமர்சித்து வருகிறார்.
Recommended Video

விளாசும் எடப்பாடி
இன்றும் கூட சேலம் செல்லும் வழியில் திண்டிவனத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுக அரசு திட்டமிட்டு அ.தி.மு.க-வை அழிக்க நினைக்கிறது. அடுத்து வரும் தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்துவதே நம்முடைய லட்சியம். தீய சக்தியான தி.மு.க-வை வீழ்த்துவதற்காக எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவை தொடங்கினார். இந்தக் கூட்டம் சாதாரண கூட்டம் அல்ல, தி.மு.க என்ற தீய சக்தியை ஓட ஓட விரட்டி அடிக்கும் கூட்டம். தி.மு.கவை வேரோடு, வேரடி மண்ணோடு அழிக்கின்ற கூட்டம். அ.தி.மு.க தொண்டர்களால் உருவாகிய கட்சி; உழைப்பால் உருவாகிய கட்சி; எந்த கொம்பனாலும் அ.தி.மு.க-வை அழிக்கவோ, ஒழிக்கவோ, ஒடுக்கவோ எந்த காலத்திலும் முடியாது." என முழங்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications