"மாட்டிறைச்சி".. ஸ்டாலினுக்கு இது தெரியுமா.. திடீர் பல்டியா? பின்னடைவா? அடுத்தடுத்த குழப்பங்கள் ஏன்?
திமுக அரசு தன் மீதான குறைகளை, விமர்சனங்களை சரி செய்து கொள்ளுமா
சென்னை: சமீபகாலமாகவே திமுக அரசு மீது ஒரு முக்கிய விமர்சனம் ஒன்று முன்வைக்கப்பட்டு வருகிறது.. இதை குறைகளாக எடுத்து கொள்ளாமல், அதை இனி வருங்காலத்தில் சரிசெய்து கொள்ள வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் விருப்பமாகவும் எழுந்துள்ளது.
10 வருடம் கழித்து திமுக ஆட்சியை பிடித்தபோது, தமிழகத்தின் நிலைமை அந்த அளவுக்கு சொல்லி கொள்வது போல் இல்லை.. ஜி.எச். வாசலில் ஆம்புலன்ஸிலேயே செத்து மடியும் அளவுக்கு கொரோனா அபாயத்தில் இருந்தநேரத்தில்தான் திமுக பொறுப்புக்கு வந்தது.
குஷ்பூ, ஜெயலலிதா வரிசையில் எம்.ஜி.ஆருக்கு கோயில்... வேலூரில் பூமிபூஜை போட்ட விசுவாசிகள்...!
அதிமுக அரசு கஜானாவை சுத்தமாக துடைத்துவிட்டு போயிருந்தது.. மத்தியில் இருந்தும் நமக்கு வர வேண்டிய நிதி வந்து சேரவில்லை..
டாஸ்மாக்
இதையடுத்து, வேறு வழியில்லாமல் பலரது எதிர்ப்புக்கு மத்தியில், டாஸ்மாக்கை மீண்டும் திறந்து, ஒருவழியாக சமாளித்து, பெரும்பாலான வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, புதிய திட்டங்களையும் அறிவித்து, மக்களின் நன்மதிப்பை, இந்த ஒரு வருடத்தில் திமுக பெற்றது சாதாரண விஷயம் இல்லை. அந்த வகையில், பாராட்டுக்குரியதும், வரவேற்கத்தக்க அரசாக திமுக உள்ளதை மறுக்க முடியாது.
சீனியர்கள்
அதேசமயம், குறைபாடு இல்லாத அரசு கிடையாது.. திமுக மீதும் ஏராளமான புகார்கள், குற்றச்சாட்டுகள் வெளிவரவே செய்கின்றன.. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், இந்த புகார்கள் எல்லாம், 2ம் கட்ட தலைவர்கள், மா.செ.க்கள், கவுன்சிலர்கள் மூலம் வந்துள்ளதே தவிர, தலைமை சரியாகவே உள்ளது.. ஆனாலும், சமீபகாலமாகவே சீனியர் அமைச்சர்கள் வாயை கொடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள்.. டிகேஎஸ் இளங்கோவன், ஆர்எஸ் பாரதி, கேஎன் நேரு, துரைமுருகன் போன்றோர் மறுபடியும் மறுபடியும் எதையாவது பொதுவெளியிலேயே உளறி கொட்டி, சொந்த கட்சியின் அதிருப்திக்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.
மாட்டிறைச்சி
இன்னொருபக்கம், தமிழக அரசு சில விஷயங்களில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளாமல் இருப்பதும் வருத்தமாகவும் உள்ளது.. உதாரணமாக, ஆம்பூரில் பிரியாணி திருவிழா நடந்தபோது, அந்த ஒருநாள் முழுக்க அவ்வளவு அமர்க்களம் நடந்தது.. மாட்டிறைச்சி விவகாரம் வெடித்து கிளம்பியது.. கடைசியில் ஒரேநாளில் ஆஃப் பண்ணிவிட்டது அரசு.. அதேபோலத்தான், பட்டினப்பிரவேச விவகாரமும்.
திருமாளவன்
மனிதனை மனிதன் சுமப்பது அறிவிலித்தனம் என்பதை முன்வைத்துதான் திராவிட கட்சிகள் எதிர்ப்பை கொட்டின.. சுயமரியாதையை வலியுறுத்தின.. திருமாவளவன், கி.வீரமணி, வைகோ, கம்யூனிஸ்ட் கட்சிகள், என அத்தனை தோழமை கட்சிகளும் திரண்டு வந்து குரல் கொடுத்தனர்.. பிறகு இந்த விஷயத்திலும், திமுக அரசு அனுமதி அளித்து பின்வாங்கி கொண்டது.. "அனைவருக்குமான" அரசு என்றும் அறிவித்தது.. "அந்த பயம் இருக்கட்டும்" என்று உடனே பாஜகவினர் சிலர் இதை விமர்சனமும் செய்தனர்.
பட்டினப்பிரவேசம்
இந்த அறிவிப்பை அந்த ஒருகாலத்துக்கு முன்பே ஏன் திமுக அரசு அறிவிக்கவில்லை? பட்டினப்பிரவேச விவகாரம் வெடிக்கும்போதுகூட, இது அனைவருக்குமான அரசுதானே? திடீரென திமுக பின்வாங்கிவிட்டால், அதுவரை குரல் கொடுத்து கொண்டிருந்த கூட்டணி கட்சிகளுக்கு பதில் என்ன? என்று நடுநிலையாளர்கள் அப்போது இதையெல்லாம் கேள்வி கேட்கவே செய்தார்கள்.
எடப்பாடி பழனிசாமி
இப்போது, அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் குறித்து இன்னொரு மாற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. எடப்பாடி பழனிசாமி அறிவித்த இந்த எல்கேஜி விஷயத்தை, ஏன் திமுக அரசு நீக்கி அறிவிக்க வேண்டும்? அப்போது ஒரு விளக்கத்தையும் தந்திருந்தது.. "எல்கேஜி, யூகேஜி பிள்ளைகளை, ஆசிரியர்கள் புரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது.. அவர்களை டீல் செய்யக்வடிய அளவுக்கு புரிதல் குறைவாக உள்ளது.. ஆசிரியர்கள் பற்றாக்குறை" என்றெல்லாம் காரணம் சொன்னது..
குழப்பங்கள்
இதற்கு ஜிகே வாசன் முதல் அன்புமணி ராமதாஸ் வரை எதிர்ப்புகளை வலுவாகவே காட்டினார்கள்.. இப்போது மீண்டும் அரசுப் பள்ளிகளிலேயே எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஒரு துறையில் ஏன் இத்தனை குழப்பங்கள்? எதற்காக இத்தனை முறை தன் நிலைப்பாட்டை திமுக அரசு மாற்றி கொள்ள வேண்டும்? ,இப்படி அடிக்கடி முடிவுகளை மாற்றி கொண்டால், அது அந்த அரசின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடாதா? என்ற கேள்விகளும் இயல்பாகவே நமக்கு எழுகின்றன.
பல்டியா? பின்னடைவா?
ஒரு நிலைப்பாட்டை மாற்றி கொள்வதால், பொதுமக்களுக்கு நன்மை கிடைக்குமானால், நிச்சயம் அதை வரவேற்கலாம்.. ஆனால், அடிக்கடி மாற்றி கொள்வது, முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடாகவே முத்திரை குத்தப்பட்டுவிடும்.. அதேசமயம், திடீர் பல்டியாகும் திமுக, பின்வாங்கும் திமுக, என்று எதிர்க்கட்சிகள் எளிதாக முணுமுணுக்க விட்டுவிடவும் கூடாது என்பதையும் இங்கு நாம் அக்கறையுடன் சொல்ல வேண்டி உள்ளது..!