பதைபதைப்பான இரண்டரை மணிநேரம்.. மதுரைக்கு நள்ளிரவில் ஆக்சிஜன் வந்தது எப்படி?.. சு.வெங்கடேசன் டிவிட்!
சென்னை: மதுரையில் நேற்று ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக எம்பி சு.வெங்கடேசன், அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பி மூர்த்தி ஆகியோர் களமிறங்கி பணிகளை செய்துள்ளனர். இரவோடு இரவாக மதுரைக்கு புதிய ஆக்சிஜன் சிலிண்டர்களை வர வைத்து, மருத்துவமனைகளுக்கு அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடும் உயர்ந்து வருகிறது. ஒடிசா, மேற்கு வங்கத்தில் இருந்தும், மத்திய அரசு ஒதுக்கும் ஆக்சிஜனும் தமிழகத்திற்கு வருகிறது. அதேபோல் தமிழக அரசின் முயற்சி மூலமாக தமிழகத்திற்கு உள்ளேயே பல மாவட்டங்களில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கறுப்பு மச்சம் கண்ணைப் பறிக்க.. கிறங்கடித்த தர்ஷா குப்தா!
சிப்காட் மூலமும், பல்வேறு மூடப்பட்ட தொழிற்சாலைகள், ஐனாக்ஸ் ஏர் இண்டஸ்ட்ரி போன்ற நிறுவனங்களின் மூலமாகவும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு தினசரி 420 மெட்ரிக் டன் வரை மொத்தமாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தட்டுப்பாடு
இதனால் இதுவரை தமிழகத்தில் எங்கும் பெரிய அளவில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது இல்லை. ஆனால் இதில் இருக்கும் நடைமுறை சிக்கலே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து மருத்துவமனைகளுக்கு சிலிண்டர்களை கொண்டு செல்வதுதான். இந்த போக்குவரத்து நேரமும், மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கர், சிலிண்டர்களை பொருத்தும் நேரமும்தான் கொஞ்சம் தாமதத்தை ஏற்படுத்துகிறது.
இல்லை
இந்த தவிர்க்க முடியாத தாமதம் காரணமாக இதுவரை அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இந்த போக்குவரத்தை நேரத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றது. அப்போதுதான் இடைவிடாமல் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும். இந்த நிலையில் மதுரையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டிய ஆக்சிஜன் நேற்று கொஞ்சம் தாமதம் ஆகியுள்ளது. நேற்று மதுரைக்கான ஆக்சிஜன் சப்ளை இரவு 11 மணிக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால் இல்லை
ஆனால் போக்குவரத்து தாமதம் உட்பட பல்வேறு காரணங்களால் ஆக்சிஜன் வரவில்லை. ஆக்சிஜன் எப்போது வரும் என்றும் தெரியவில்லை .இதனால் மதுரையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவோடு இரவாக மதுரை சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் களத்தில் இறங்கி ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். வார் ரூமிற்கு கால் செய்து இது தொடர்பாக பேசி, விரைவாக ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர். ஆக்சிஜன் காலியாகும் முன் ஆக்சிஜன் கிடைக்க வேண்டும் என்பதால் துரிதமாக செயல்பட்டுள்ளனர். 11 மணிக்கு இவர்கள் களமிறங்கிய நிலையில் 1.15 மணிக்கு மதுரைக்கு தேவையான ஆக்சிஜன் வந்து சேர்ந்தது.
ஆக்சிஜன் தேவை
இது தொடர்பாக மதுரை சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் பதைபதைப்பான இரண்டரை மணிநேரம் என்ற தலைப்பில் செய்துள்ள போஸ்டில், கோவிட் இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் எவ்வளவு அவசியம் என்பது நமக்குத் தெரியும் . மதுரைக்கு வரவேண்டிய ஆக்ஸிஜன் வழக்கத்தை விட சில மணி நேரம் தாமதமாக வரும் சூழ்நிலை. நிலைமையை யோசிக்கவே பெரும் பதற்றம். பெரும்படை களத்தில் இறங்கி நிலைமையை சமாளிக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய, ஆக்ஸிஜன் வந்து சேர நள்ளிரவு 1:15 ஆகிவிட்டது. 11 மணியில் இருந்து ஆக்ஸிஜன் வந்துசேரும் நிமிடம் அடைந்த பதைப்புக்கு வார்த்தைகள் இல்லை. தாமதமில்லா ஆக்ஸிஜன் வரத்து மதுரைக்கு மிக அவசியம் . இன்னும் தீவிரமாக பணிகளை இடைவெளியின்றி கண்காணித்தல் முன்னிலும் அவசியம் . நோயுடன் நோயாளி நடத்தும் போராட்டத்தைவிட பலமடங்கு உயிர்துடிப்போடு நிர்வாகத்தினர் போராட வேண்டிய நேரமிது.
உடன் இருந்தனர்
தமிழக நிதி& மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு PTRபழனிவேல் தியாகராஜன் மாநில கட்டுப்பாட்டு அறையோடு தொடர்ந்து பேசி ஆக்ஸிஜன் விரைவாக கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும், பத்திரப்பதிவு&வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி மதுரையின் மற்ற தனியார் ஆக்ஸிஜன் கிடைக்கும் இடங்களில் இருந்து சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.
கூடுதல் ஆட்சியர் பிரியங்கா , DRO செந்தில்குமாரி, அரசு ராஜாஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் ஆகியோர் பணிகளில் உடனிருந்தனர், என்று எம்பி வெங்கடேசன் தனது போஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை
நேற்று அமைச்சர்கள், எம்பி எல்லோரும் இப்படி களமிறங்கி பணியாற்றியதால் மதுரைக்கான ஆக்சிஜன் வந்து சேர்ந்தது. அதோடு இதனால் நேற்று மதுரையில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரையில் உற்பத்தி ஆகும் ஆக்சினை மதுரைக்கு வழங்குவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். நெல்பேட்டை, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜன்களை, தாமதம் ஆகாமல் துரிதமாக மதுரைக்கு வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.