முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம்! ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இவ்வளவு செலவா? ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல்!
சென்னை : ஆறுமுகசாமி ஆணையத்திற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? என தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மஸ்தான் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுள்ளார்.
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 2016 சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கிரீன்வேஸ் ஆலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக நீண்ட காலமாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். இதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது

ஜெயலலிதா மரணம்
இன்னிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அப்போதைய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

ஆறுமுக சாமி ஆணையம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மருத்துவர்கள் செவிலியர்கள் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா புகார் அளித்த ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் இடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டு காலமாக இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் பலமுறை ஆணையத்தின் விசாரணை காலம் நீட்டிக்கப்பட்டது.

அறிக்கை தாக்கல்
தற்போது விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆணையத்தின் அறிக்கையை ஆணையத்தின் விசாரணை தலைவரான ஆறுமுகசாமி இன்று தமிழக அரசிடம் தாக்கல் செய்தார். 2017ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில்,1,798 நாட்களுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்து கூடும் சட்டசபையில் விசாரணை ஆணையத்தின் அறிக்கை வைக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

செலவு எவ்வளவு
இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? என பலரும் கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில் இந்த ஆணையத்திற்காக செலவிடப்பட்ட தொகை குறித்து மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மஸ்தான் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுள்ளார். அதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட இந்த ஆணையம் அமைக்கப்பட்டது முதல் முடிவுற்ற நாள் வரை 3 கோடியே 60 லட்சத்து 95 ஆயிரத்து 283 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications