எப்படி இருக்க வேண்டும் தமிழக தேர்தல் வாக்குறுதி? "நச்சென" நம்ம வாசகர் சொல்வதை பாருங்க
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பெருமளவுக்கு எழுந்துள்ளது.
தேர்தல் வாக்குறுதி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி, "எது தேர்தல் வாக்குறுதி?" என்ற கேள்வியை எழுப்பி, அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணம், ஆஸ்டின் நகரிலிருந்து, 'ஒன்இந்தியா தமிழ்' வாசகர், மாணிக்கம் விஜயபானு எழுதியுள்ளார். நீங்களும் பாருங்கள்:
ஒரு வழியாக நேரடி அரசியல் களத்தில் - ரஜினி.! ரஜினியின் இந்த திடீர் அரசியல் அறிவிப்பு, இனி தமிழக அரசியலின் கூட்டணி கபடி ஆட்டத்தை வெகு விரைவிலேயே துவங்கி வைத்து விடும். இதனால், யாருக்கு பயனோ, இல்லையோ, தேர்தல் நாள் வரை, அரசியல் விமர்சகர்களுக்கும், சமூக வலை பிரியர்களுக்கும், டீக்கடை பெஞ்சில் வாய் வார்த்தையில் ஜல்லி அடிப்பவர்களுக்கும் தினமும் தீபாவளி தான்.
சரி. விசயத்துக்கு வருவோம். இங்கு யார் முதல்வராக பதவிக்கு வந்தாலும், பாமர, அடித்தட்டு மக்களின் எதிர் பார்ப்பும், அடிவயிற்றில் இருந்து குரல் கொடுக்கும் சாமானிய தொண்டனின் எதிர்பார்ப்பும் என்ன? பட்டியலிட்டால் பத்து குயர் ஒற்றைவரி நோட்டு நிரம்பி வழியும். எனவே அதை தவிர்த்து, இந்த "கொரோனா" யுகத்தில், வரப்போகும் அரசிடம், மக்களின் உடனடி ஆக்ஸிஜன் தேவை எதுவென்று பார்ப்போம். இது, நாளை முதல்வர் பதவிக்கு வர களத்திலிருக்கும் எந்த கட்சிக்கும் பொருந்தும்.
எது வாக்குறுதி?
பொது சேவை என்று வரும் போது, எதுவமே ஒரு தனிப்பட்ட மனிதர் சார்ந்து சாத்தியப்படுத்தும் செயல் அல்ல. ஒரு கூட்டு முயற்சி. இதற்கு முக்கியமாக, நேர்மை, சுயநலமின்மை, பரந்த எண்ணம், மக்கள் நல ஆர்வம், தொலைநோக்கு, நெஞ்சுரம் மற்றும் கொடுக்கும் வாக்கின் மீது பயம் தேவை. இன்று இருக்கும் பெரிய அண்ணன்கள் முதல், சின்ன தம்பி வரை உள்ள எல்லா கட்சிகளும், பலமுறை இரண்டாம் வாய்பாடு போல ஆயிரம் முறை கூறி புளித்து போன விசயமாக இருந்தாலும், இன்னும் செயலில் இல்லாததால், நாம் எதிர் நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதே நிதர்சனம்.
இதற்கு முதலில் அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை நன்கு புரிந்திருக்க வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். மக்களோடு ஒன்றாக கலந்துரையாட வேண்டும். அவர்களின் சிரமங்களை, அவசர தேவைகளை, வேதனையின் வீரியத்தை, அதில் உள்ள உண்மைகளை பகுத்தறிந்து அதன் பின் திட்டங்களிலும், வாக்குறுதிகளிலும் அதை முறைப்படுத்தி, பின் அறிவிக்க வேண்டும். அப்படி அறிவிப்பதற்கு முன்பு, அதனை செயல்படுத்த இயலுமா என்பதை பல முறை சிந்தித்து, கலந்து ஆலோசித்து பின் வாக்குறுதியில் சேர்க்க வேண்டியது மிக முக்கியம். இதற்கு முன்பு ஒவ்வொரு முறையும் கேட்ட அறிவிப்புகள் எல்லாம் வெறும் வாக்குறுதிகளாக, வெற்று வெள்ளை காகிதத்தோடு நின்று விட்டு, பின் மழையில் படகு செய்து விட்ட வருடங்கள் இங்கு நிறையவே உள்ளது.
பொது சேவை என்று வரும் போது, எதுவமே ஒரு தனிப்பட்ட மனிதர் சார்ந்து சாத்தியப்படுத்தும் செயல் அல்ல. ஒரு கூட்டு முயற்சி. இதற்கு முக்கியமாக, நேர்மை, சுயநலமின்மை, பரந்த எண்ணம், மக்கள் நல ஆர்வம், தொலைநோக்கு, நெஞ்சுரம் மற்றும் கொடுக்கும் வாக்கின் மீது பயம் தேவை. இன்று இருக்கும் பெரிய அண்ணன்கள் முதல், சின்ன தம்பி வரை உள்ள எல்லா கட்சிகளும், பலமுறை இரண்டாம் வாய்பாடு போல ஆயிரம் முறை கூறி புளித்து போன விசயமாக இருந்தாலும், இன்னும் செயலில் இல்லாதால், நாம் எதிர் நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதே நிதர்சம்.
மக்களின் தேவை எது?
ஒவ்வொரு மாவட்டத்தின் கிராமங்களில் தான் உள்ளது நம் உண்மையான வாழ்க்கை தரம். உதாரணத்திற்கு, ராமநாதபுரம் மாவட்ட மக்களின் தேவைகளும், கோவை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பும் வேறு வேறாக இருக்கும். விவசாயமும், கிராமமும்,மாணவர்களும்,பெண்களும் உயர்வு பெற்றால், நகரம் அதைவிட பலநூறு மடங்கு உயர்ச்சி பெறும். இதற்கு கிராமம் தோறும் தொடர்பு கொண்டு, கலந்துரையாடி, அலசி ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு பொது திட்டங்களை வகுக்க வேண்டும். அந்த திட்டங்களை, இதற்கு முன் அதே துறைகளில் திறம்பட பணியாற்றி ஓய்வு பெற்ற, அரசியல் சார்பற்ற, பணியாற்றிய காலத்தில், கொடுத்த செயலை செய்து காட்டிய அதிகாரிகளை தேடிக் கண்டெடுத்து, அவர்களோடு இன்றைய புதிய சிந்தனை உள்ள படித்த இளைய வயது தொலை நோக்கு பார்வையாளர்களை இணைக்க வேண்டும். இது மிக அடிப்படை தேவை. சரியான வாய்ப்பு கிடைத்தால் இதனை ஒரு இலவச சேவையாக செய்ய, இங்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு கரம் சேர்ப்பதே முக்கியம்.
இத்தகைய நல்ல திட்டங்களை, படித்த, தெளித்த, அனுபவமுள்ள அதிகாரிகளை கொண்டு முறைப்படுத்த வேண்டும். முக்கியமாக, அத்தகைய திட்டங்கள் எளிதாக பாமர மக்களை, சாமானியர்களை சென்றடைய இருக்கும் இடையூர்களை முன்பே கண்டறிந்து, வெறும் வெற்று பேச்சுக்களை தவிர்த்து, அதனை அடிவேரோடு களை எடுக்க துணிவு வேண்டும். அந்த களை எடுப்பிற்கான வழிமுறைகளை, திட்டங்களை வரையறுக்கும் போதே கணக்கில் எடுத்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முக்கியமாக, இன்றைய நவீன அறிவியல் உத்திகளை, கணினி வழி பரிமாற்றங்களை அதிகம் பயன்படுத்தி அதன் மூலம் சீராக சென்றடைய வழி வகுக்க வேண்டும்.
நடைமுறை சிக்கல்கள்
சரியாக சொன்னால், நம் அனுபவத்தில், இன்று ஒரு அடிப்படை பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவது கூட மிக எளிதான செயலாக எந்த நகரங்களிலும் இல்லை. சென்னை போன்ற பெரிய நகரங்களில் இதனை கணினி மூலம் நடை முறைபடுத்தி இருந்தாலும் இன்னும் மிக சிக்கலான அணுகு முறையாகவே உள்ளது மிக உண்மை. பல கட்டங்களை, இன்னல்களை சந்தித்த பிறகே இது சாத்தியபடுகிறது. இது போன்ற மக்களின் மிக மிக அடிப்படை தேவைகளை நவீன கணினி மயம் செய்ய வேண்டும். இடை தரகர்களையோ, ஒரு தனிப்பட்ட மனிதரையோ, யாரோ ஒரு அதிகாரியின் தனிப்பட்ட பார்வைக்காகவோ முடிந்தவரை சாராமல், தனித்தியங்கும் கட்டமைப்புகளை உருவாக்க வரப்போகும் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். பிறப்பு / இறப்பு சான்றிதழ் பெற, மருத்துவமனையும், அரசு இயந்திரமும் ஒன்றிணைந்து இதனை எளிமையாக்க வேண்டும். கிராமம் , பஞ்சாயத்து , நகர்ப்புறம் என அனைத்து மக்கள் தினத் தேவை நகர்வுகளையும் கணினி மூலம் ஒன்றிணைத்து ஒரே கட்டமைப்பின் கீழ் செயல்படுத்த வேண்டும்.
வாக்கு சீட்டு அடையாள அட்டை, ஆதார் கார்டு, டிரைவர் லைசென்ஸ், ரேஷன் கார்டு, போன்ற புகைப்பட பல்முனை ஆதாரங்களை ஒன்று திரட்டி, கணினியில் இணைத்து அதன் அடிப்படையில் பரிசீலித்து இதுபோன்ற சான்றிதழ்கள் வழங்குவதை நடைமுறை படுத்த வேண்டும். இதன் மூலம் தேவையற்ற காலதாமதம், லஞ்சம் மற்றும் தேவையற்ற இன்னல்களை தவிர்க்கலாம். இதனை நடைமுறை படுத்த துவக்கத்தில் பல சிரமங்கள் இருந்தாலும் நாளடைவில் மிகுந்த பலன் தருவது நிச்சயம். ஒரு தெளிந்த வெளிப்படை தன்மையை காணலாம். இதே முறைகளை ஒவ்வொரு துறைகளிலும் ஒற்றியெடுத்து சேர்த்து கொண்டே போகலாம்.
நவீன அரசியலும் வளர்ச்சி திட்டங்களும்
படித்த இளைஞர்கள், மாணவர்களின் நவீன, திறமையான, மேம்படுத்தப்பட்ட வளர்ச்சி யோசனைகளை பகிர்ந்து கொள்ள ஒரு அரசு சார்பற்ற வழிமுறையும், அதில் தனியார் நிறுவங்கள், ஊடகங்கங்கள் ஒன்றிணைந்து கைகோர்க்க நவீன செயல் முறை தளங்களும் அமைத்து கொடுக்க வேண்டும். அதில் வறுமையில் பின்தங்கிய திறமையான மாணவர்களுக்கு முன்னுரிமை இருக்க வேண்டும்.
நன்கு படித்தும் வறுமை காரணம் மேல் படிப்பை தொடர முடியாத மாணவர்கள் வெறும் ஊடக வாயிலாக மட்டுமே உதவிகளை நாடாமல், ஒருங்கிணைந்த, விரைவாக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல ஒரு தனி செயலாக்கம் வேண்டும். இதில் தனியார் நிறுவனங்கள், ஊடகங்கள் பங்களிக்க முன்னுரிமை வேண்டும். இது உருப்படியாக நடந்தாலே மாணவர் தற்கொலை, வறுமையில் படிக்க இயலாமை போன்ற செய்திகள் தேவை அற்றது ஆகிவிடும். இவை அனைத்தும், "ஒரு பானை சோத்து பதம் மட்டுமே"