3 அஸ்திரங்கள்.. ஈபிஎஸ்க்கு செக் வைப்பது எப்படி? சென்னையில் ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை.. பரபர பின்னணி!
அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர் செல்வம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் அவர் சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது என அங்கீகாரம் வழங்கி உத்தரவிட்டது. மேலும் கட்சியில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதையும் இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. இதனால் ஓ பன்னீர் செல்வம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் யாரெல்லாம் பங்கேற்றனர்? இதன் பின்னணி என்ன? என்பது பற்றிய பரபர தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஆண்டு பூதாகரமாக வெடித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு அதிமுகவில் பிரளயம் வெடித்தது.
அதாவது கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுகவில் பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதோடு இந்த பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்த பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அமைந்தது. இதை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூலை மாதம் 11ம் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் . இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என தீர்ப்பு வழங்கியது. இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

ஈபிஎஸ்க்கு கிடைத்த வெற்றி
ஜூலை 11 பொதுக்குழுவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது. இந்த தீர்ப்பின் மூலம் அவரது நீக்கத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன்மூலம் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மாபெரும் வெற்றியாகும். மாறாக ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியினருக்கு இந்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு ஓ பன்னீர் செல்வம் உள்பட அவரது அணியினரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை
இந்நிலையில் தான் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓ பன்னீர் செல்வம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அரசியலில் மூத்த தலைவராக உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன், எம்எல்ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.. நேற்று அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் இன்று இந்த ஆலோசனை நடப்பதால் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

விவாதித்தது என்ன?
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் அதிமுக விஷயத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அதாவது தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யலாமா? இல்லாவிட்டால் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறியது படி சிவில் நீதிமன்றத்தை அணுகலாமா? என்பது பற்றி அவர் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்தை அவரது அணி அணுக உள்ள நிலையில் அதற்கும் ஏதாவது ஒரு வகையில் செக் வைக்க வாய்ப்புள்ளதா? என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications