கணவர்களே மிக கவனமாக இருங்க.. மனைவிகளை காக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
சென்னை: குடிபோதையில் வந்து தினமும் கொடுமை செய்யும் கணவனை விவாகரத்து செய்ய மனைவிக்கு முழு உரிமை உள்ளது.. குடும்ப நல நீதிமன்றம் இது தொடர்பாக வழங்கிய தீர்ப்பு சரி என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வேலைக்கு சரிவர போகாமல், மனைவியிடம் பணத்தை பறித்து குடித்துவிட்டு தினமும், மனைவியை கொடுமைப்படும் பல ஆண்கள் நமது பகுதிகளில் இருக்கிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்களை சந்தேகப்படுவது, இவருடன் ஏன் பேசுகிறாய், அவருடன் ஏன் பேசுகிறாய். இவர் தான் உன் கள்ளக்காதலனா, இவரைத்தான் நீ வைத்திருக்கிறாயா... என்று குடித்துவிட்டு தகராறு செய்வதும்... காலையில் ஒன்றுமே தெரியாதது போல் நல்லவர்கள் போல் நடிப்பதும் பல வீடுகளில் நடக்கிறது.

வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு அடிப்பதுடன், நடத்தையில் அடிக்கடி சந்தேகப்படும் கணவனை விவாகரத்து செய்ய முடியாமல் பெண்களும் பொறுமையாக செல்கிறார்கள். இதற்கு காரணம் குழந்தைகளின் எதிர்காலம் தான். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் ஆண்களில் சிலர் கொடுமை செய்கிறார்கள்.
இந்நிலையில் குடிக்கு அடிமையானது மட்டுமல்லாமல், மனைவி ஒழுக்கம் கெட்டவள் என்று தன் மனதுக்குள் எண்ணத்தை உருவாக்கி, உடலாலும், மனதாலும் கொடுமை செய்த கணவரை ஒரு பெண் விவாகரத்து செய்தார். இவருக்கு குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது சரிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரபல கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்பவர் லீலா. இவர், டேவிட் என்பவரை காதலித்து கல்யாணம் செய்தார். (இருவர் பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது) இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் தன் கணவர், குடித்துவிட்டு , சந்தேகப்பட்டு அடித்து கொடுமை செய்வதாக கூறி திருச்சி குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றார்.
இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டேவிட் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்எம்டி. டீக்காராமன், பி.பி.பாலாஜி ஆகியோர் விசாரித்து தீர்ப்பளித்துள்ளனர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், லீலா இந்து மதத்தைச் சேர்ந்தவர். டேவிட்டை காதலித்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அவரை கல்யாணம் செய்து உள்ளார். இதற்காக தன் பெயரையும் லீலா மாற்றிக் கொண்டார்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சிக்காக லீலா வெளியூர் சென்றபோது வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது என்று டேவிட் சந்தேகம் கொண்டு தகராறு செய்திருக்கிறார். இதை உண்மை என்று நம்ப தொடங்கிய டேவிட், தினமும் குடித்துவிட்டு மனைவியை துன்புறுத்தியிருக்கிறார்.
பக்கத்து வீட்டுகாரர்களுடனும் சண்டை போட்டுள்ளார். இதனால் வேறு ஊருக்கு இடமாறி சென்று லீலா குடியேறியுள்ளார். ஆனால், முன்பு இருந்த வீட்டு வசதி வாரிய வீட்டை காலி செய்யாமல், டேவிட் பிரச்சினை செய்திருக்கிறார. பின்னர், புது வீட்டிற்கு வந்து பழையபடி தகராறு செய்ததால், அந்த வீட்டையும் காலி செய்து, லீலா வேறு வீட்டிற்கு குடியேறியுள்ளார். அங்கு வந்தும் பிரச்சினை செய்ததால் போலீசில் புகார் கூறியுள்ளார்.
இதுதவிர லீலா வேலை செய்யும் கல்லூரிக்கு சென்றுள்ள டேவிட், அவரது ஒழுக்கம் பற்றி விசாரித்து, அவருக்கு மிகப்பெரிய அவமானத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார். இதனால், வேலை செய்யும் இடத்தில் லீலாவிற்கு கண்ணியம், கவுரவம், சுயமரியாதை குறைவு ஏற்பட்டுள்ளது. இதுதவிர லீலாவிட் ஏ.டி.எம். கார்டை டேவிட் பறித்துக் கொண்டார். அதை பயன்படுத்தி, வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து குடித்து காலி செய்திருக்கிறார்.
மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளது என்று கூறும் டேவிட், அதற்கான ஒரு ஆதாரத்தை கூட தாக்கல் செய்யவில்லை. இதுதவிர மனைவியின் இந்த செயலால்தான் மனவேதனையில் தினமும் குடிப்பதாகவும் கூறுகிறார். எந்த வேலைக்கும் செல்லாமல், மனைவியிடம் பணத்தை பறித்து குடிபழக்கத்துக்கு அடிமையானது மட்டுமல்லாமல், மனைவி ஒழுக்கம் கெட்டவள் என்று தன் மனதுக்குள் எண்ணத்தை உருவாக்கி, அவரை கொடுமை செய்து வந்திருக்கிறார்.
மனைவியின் ஒழுக்கத்தின் மீது சந்தேகம் கொண்டு, மனைவியை உடலாலும், மனதாலும் டேவிட் கொடுமை செய்திருப்பது தெரிகிறது. இவற்றை எல்லாம் பரிசீலித்து தான் குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் தவறு எதுவும் இல்லை. கீழ் நீதிமன்றம் முடிவு சரிதான். இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறோம்" இவ்வாறு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications