சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும் போது இதை கவனிச்சீங்களா.. ஒன்றல்ல.. 2 பக்கமும் அடி!
சென்னை: கேஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியமும் வெகுவாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்னொரு பக்கம் கேஸ் சிலிண்டர் மானியத்திற்காக வங்கி கணக்கு ஓபன் செய்தவர்கள் பலருக்கு வங்கி கணக்கில் போதிய இருப்பு இல்லை அபராதமும் விதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கேஸ் சிலிண்டர் மானியம் வழங்குவதாக கூறித்தான் அரசு அனைவரையும் வங்கி கணக்கு திறக்க வைத்தது. வங்கி கணக்கு திறக்க 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் கட்டி வங்கி கணக்கு ஓபன் செய்தவர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர்.
ஆரம்பத்தில் வழங்கப்பட்ட கேஸ் மானியம், படிப்படியாக குறைந்ததுள்ளது. வங்கி கணக்கில் அவர்களுக்கு உரிய மானியம் கிடைக்காமல் உள்ள நிலையில், மினிமம் பேலன்சை பராமரிக்க முடியாததால் அபராதத்தை சந்தித்து வருகிறார்கள் மக்கள். ஜன்தன் கணக்கு ஓபன் செய்தவர்களுக்கு மட்டும்தான் அபராதம் விதிக்கப்படவில்லை. ஜன்தன் அல்லாத பல கோடி கணக்குகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கேஸ் மானியம்
நம் நாட்டில் ஒரு குடும்பம் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மட்டும் மானிய விலையில் பெறலாம் என்பது அரசின் விதி. இதற்கான மானியத்தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. 12 சிலிண்டருக்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை மானியம் இல்லாமல் தான் வாங்க முடியும். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் நிலவரத்துக்கு ஏற்ப மானியம் இல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
எவ்வளவு கிடைக்கிறது
கடந்த 2019 டிசம்பர் மாதம் கேஸ் சிலிண்டர் விலை ரூ.714 ஆகவும், மானியம் ரூ.174.72 ஆகவும் இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் சிலிண்டரின் விலை ரூ.569 ஆக இருந்தது. ஆனால் மானியம் கொடுக்கப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் சிலிண்டரின் விலை ரூ.606 முதல் ரூ.881 வரை வெவ்வேறு விலைகளில் நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது வாடிக்கையாளர்களுக்கு மானியமாக வெறும் ரூ.25.45 மற்றும் ரூ.23.95 என வெவ்வேறு தொகை செலுத்தப்பட்டது. கடந்த டிசம்பரில் சிலிண்டர் விலை ரூ.710 ஆனது. அதற்கான மானியமாக ரூ.24.95 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது.
விலை உயர்வு
கடந்த ஜனவரி மாதம் கேஸ் மானியமாக ரூ.65.14 வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2.38 கோடி கேஸ் வாடிக்கையாளர்கள் உள்ளார்கள் இவர்களில் 32 லட்சம் பேர் தாமாக முன்வந்து மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளார்கள். விட்டுக்கொடுக்காதவர்களில் பெருமபாலானவர்கள் என்று பார்ததால் கொரோனா பேரிடரால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர ஏழை மக்கள் தான். சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில்,, மானியத்தொகை குறைக்கப்பட்டிருப்பதும் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு கையில்
ஏற்கனவே பலருக்கு மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை என்றும், செல்போன்களுக்கு குறுஞ்செய்தி வருவதில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. மானியத்தொகை குறைக்கப்பட்டிருப்பது அறிந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் நேராக கேஸ் சிலிண்டர் ஏஜென்சிகளுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் கூறும் போது, 'பெட்ரோலிய அமைச்சகம் தான் மானியத்தொகையை நிர்ணயம் செய்கிறது. அவர்கள் குறிப்பிடும் தொகையை மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் வசூலிக்கின்றன' என்றார்கள்.
மைனசில் கணக்குகள்
இதனிடையே மக்கள் இன்னொரு பேரிடியாக மானிய தொகை கிடைக்கும் என்று நினைத்து வங்கி கணக்கு ஓபன் செய்த பலர், மானிய தொகையும் கிடைக்காமல், வங்கி கணக்கில் மினிமம் பேலன்சை பராமரிக்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் அவர்களின் பலரது கணக்கு மைனசில் போய் உள்ளது. இந்த சூழலில் தான் பெட்ரோல் டீசீல் மீது வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. சிலிண்டர் விலையும் 25 ரூபாய் இந்த மாதம் உயர்த்தப்பட்டுள்ளது