திமுகவுக்கு தாரை வார்க்கப்பட்ட 3 எம்பிக்கள்.. வைத்திலிங்கம், கேபி முனுசாமியின் ராஜினாமா பின்னணி!
சென்னை: அதிமுகவைச் சேர்ந்த கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்எல்ஏ பதவியை ஏற்றுக்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே அதிமுக எம்பி முகமது ஜான் இறந்துவிட்டதால் அந்த இடமும் காலியாக உள்ளது. இந்த மூன்று இடங்களிலும் திமுகவே வெல்ல வாய்ப்பு உள்ளது.
இந்த சூழலில் கேபி முனுசாமியும், வைத்திலிங்கமும் ஏன் ராஜினாமா செய்தார்கள் என்பது குறித்த அதிமுக வட்டாரத்தினர் கூறிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
பேரிடர் மீட்பு ஸ்பெஷலிஸ்ட்.. சுனாமி, புயல்ன்னா சூறாவளி வேகம்.. கிளிண்டனே பாராட்டிய ஜெ.ராதாகிருஷ்ணன்
2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்த வைத்திலிங்கம், ராஜ்ய சபா எம்பியாக அதிமுக தலைமையால் தேர்வு செய்யப்பட்டார். அவருடைய பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது.
கேபி முனுசாமி எம்பி
இதனிடையே 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் அதிமுக சார்பில் முகமது ஜான், ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் இறந்து விட்டதால் அந்த பதவி காலம் காலியானது. இந்த பதவிக்காலம் முடிவடைய 4 ஆண்டுகள் உள்ளன. இதனிடையே கடந்த ஓராண்டுக்கு முன்னர் கே.பி.முனுசாமி ராஜ்யசபா எம்பியாக அதிமுக தலைமை தேர்வு செய்தது.
திமுக வெற்றி பெறும்
தற்போது அ.தி.மு.க கூட்டணியில் 75 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தி.மு.க கூட்டணியில் 159 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். எம்.எல்.ஏக்களில் பெரும்பகுதியினர் தி.மு.க பக்கம் இருப்பதால் ஒவ்வொரு ராஜ்ய சபா இடத்திலும் பெரும்பான்மை என்ற அடிப்படையில் தி.மு.கவே வெற்றி பெறும். வைத்திலிங்கத்துக்கான இடத்துக்கு தேர்வு செய்யப்படுகிறவர் யாராக இருந்தாலும் ஓராண்டுதான் பதவி வகிக்க முடியும். கேபி முனுசாமி இடத்திற்கு வருபவர் ஐந்து வருடமும் ஜான் இடத்திற்கு வருபவர் 4 வருடமும் எம்பியாக பதவி வகிக்க முடியும். இந்த தேர்தல்கள் எப்போது நடக்கும என்பது தெரியவில்லை.
அதிமுகவிற்கு இரண்டு இடங்கள்
இதனிடையே 2022 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆறு ராஜ்ய சபா இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்களை விகிதாச்சார அடிப்படையில் பிரிக்கும்போது 4 இடங்கள் தி.மு.கவுக்கும் 2 இடங்கள் அ.தி.மு.கவுக்கும் கிடைக்கும். தற்போது நடக்க உள்ள மாநிலங்களவை இடைத்தேர்தலில் மூன்று இடங்கள் காலியாக இருந்தாலும் வேறு வேறு பிரிவுகளில் காலியாகிறது. இதில் அதிக இடங்களைக் கொண்டுள்ள கட்சியின் வேட்பாளரே வெற்றி பெறுவார் என்பதால் மூன்று இடங்களும் தி.மு.க வசம் போகிறது. மீண்டும் இந்த இடங்களுக்கு முழு தேர்தல் நடக்கும் போதும் திமுகவே வெல்லும். அப்போது எம்பிக்கள் 6 வருடங்கள் பதவி வகிப்பார்கள் என்பதால் இந்த இடைத்தேர்தல் மிக முக்கியான பார்க்கப்படுகிறது.
மாநில அரசியல்
வைத்திலிங்கம் ஒரு வருடம் மட்டுமே இன்னமும் பதவி காலம் இருப்பதால் அவர் பதவியை இழந்தது விமர்சனம் எழவில்லை. ஆனால் கே.பி.முனுசாமிக்கு ஐந்தாண்டுகள் பதவிக் காலம் உள்ள நிலையில் இந்த இடத்தை இழப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், வைத்திலிங்கமும் கே.பி.முனுசாமியும் முக்கியமான தலைவர்கள். இவர்கள் 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனதால் வைத்திலிங்கத்துக்கு ஜெயலலிதா ஒரு வாய்ப்பு கொடுத்தார். அதேபோல், சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கே.பி.முனுசாமியால் வெல்ல முடியவில்லை. இவர்கள் இருவருமே கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளனர். தற்போது சட்டமன்றத்தில் தி.மு.க வலுவாக அமர்ந்திருப்பதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் மாநில அரசியலில் பங்கெடுப்பதே நல்லது என இருவரும் முடிவு செய்து ராஜினாமா செய்துள்ளார்கள் என்கிறார்கள்.