“எடப்பாடியோடு பேச ரெடி.. அவங்களை கண்டிக்கணும்” -கொதித்த ஓபிஎஸ் - யாரை சொல்றாரு தெரியுதா? நடக்குமா?
சென்னை : எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயார், எனக்கு எந்த ஈகோவும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஒற்றைத் தலைமை தொடர்பாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இரு அணிகளாக பிரிந்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நானும், எடப்பாடி பழனிசாமியும் பேசி ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு முடிவு காண வேண்டும். பொதுக்குழுவுக்கு முன்னதாக நாங்கள் இணைந்து ஒரு முடிவெடுத்து விட்டால் பொதுக்குழுவில் எந்த பிரச்சனையும் வராது என்றும் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமை
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தின்போது சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என வலியுறுத்தி பரபரப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து ஒற்றைத் தலைமை குறித்து கடந்த 3 நாட்களாக பிரச்சினை வலுத்துள்ளது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருமே முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பொதுச் செயலாளர் பதவி
ஒற்றைத் தலைமை விவாதம் அதிமுகவில் பெரும் மோதல்களை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் எந்த காரணத்திற்காகவும் அதிமுக இரண்டாக உடையக் கூடாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுச் செயலாளர் என்ற பதவி இனி யாருக்கும் வழங்க கூடாது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்குச் செய்கிற துரோகம்.

எடப்பாடி பழனிசாமி சொல்ல வேண்டும்
இதுவரை நானோ எடப்பாடி பழனிசாமியோ இதுவரை ஒற்றை தலைமை குறித்து பேசியதே இல்லை. ஒற்றை தலைமை குறித்து நான் நேரடியாக குற்றம் சுமத்தி யாரையும் நோகடிக்க விரும்பவில்லை. ஒற்றை தலைமை தேவையா இல்லையா என்பதை பழனிசாமி தான் விளக்க வேண்டும். எனது கருத்தை கூறி விட்டேன் எடப்பாடி பழனிசாமி தான் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும்.

ஈகோ இல்லை
நான் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க காரணம் தொண்டர்கள் தான். எந்த காரணத்திற்காகவும் அதிமுக இரண்டாக உடையக்கூடாது. ஆகவே எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். எனக்கு எந்த ஈகோவும் இல்லை. நானும், எடப்பாடி பழனிசாமியும் பேசி ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு முடிவு காண வேண்டும். பொதுக்குழுவுக்கு முன்னதாக நாங்கள் இணைந்து ஒரு முடிவெடுத்து விட்டால் பொதுக்குழுவில் எந்த பிரச்சனையும் வராது. ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் அதிமுக பொது குழுவில் தீர்மானம் கொண்டு வர முடியாது." எனத் தெரிவித்துள்ளார்.

கண்டிக்க வேண்டும்
மேலும், எந்த ஒரு அதிகார ஆசையும் கொண்டவன் நான் அல்ல. எந்தக் காரணத்திற்காகவும் கட்சி இரண்டாக உடையக்கூடாது. எடப்பாடி பழனிசாமியுடன் பேச நான் தயார். நானும் எடப்பாடி பழனிசாமியும் கலந்து பேசி, இந்த நேரத்தில் ஒற்றைத் தலைமை பற்றி பேசிய பிரச்சனையை ஏற்படுத்தியவர்களை கண்டிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

சிக்கல்
மேலும், "மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாதவரம் மூர்த்தி தான் முதன் முதலில் 'ஒற்றைத் தலைமை வேண்டும்' என ஆரம்பித்தார். கூட்டத்தில் பேசியிருந்தாலும், அது குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது எனச் சொல்லியிருந்தும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியில் போய் பேட்டியில் சொன்னதால் இந்த பிரச்சனை மிகப்பெரிய பூதாகரமாகிவிட்டது." எனவும் ஓ.பி.எஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

வாய்ப்பு இருக்கா?
இதன்மூலம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு மெசேஜ் கொடுத்துள்ளார். ஆனால், தனது ஆதரவாளர்கள் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. இதில், ஓ.பி.எஸ் சமாதானம் அடைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications