டிராமா.. ஓசியில் வரமாட்டேன்னு மூதாட்டி அடம்பிடித்த வீடியோ பின்னணியில் அதிமுக புள்ளி.. திமுக விளாசல்
சென்னை: கோவையில் பெண்களுக்கான இலவச பஸ்சில் ஏறிய மூதாட்டி, ‛‛நான் ஓசியில் பயணம் செய்யமாட்டேன். காசு கொடுக்கிறேன். டிக்கெட் கொடு'' எனக்கூறி பணம் கொடுத்து பயணிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்நிலையில் தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் அதிமுக ஐடி விங்க் பிரித்திவிராஜ் என்பவர் தனது பக்கத்து வீட்டு மூதாட்டி துளசியம்மாளை அழைத்து வந்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளதாக திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தான் அரசு டவுன் பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தால் தினமும் ஏராளாமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் மாதந்தோறும் அவர்களுக்கு குறிப்பிட்ட தொகை மிச்சமாகி வருகிறது.
இது தான் அதிர்ஷ்டம்.. வாங்கிய 3 லாட்டரிக்கும் பரிசு.. ஒரேநாளில் ரூ1.22 கோடிக்கு சொந்தக்காரரான தாத்தா
‛ஓசி’ எனும் வார்த்தையால் சர்ச்சை
இருப்பினும் இலவச பயணத்துக்கான பஸ் அடிக்கடி இயக்கப்படுவது இல்லை. இலவச பயணம் என்பதால் கண்டக்டர்கள் பெண்களிடம் தரக்குறைவாக பேசுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதற்கு மத்தியில் தான் சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்களுக்கான இலவச பயண திட்டம் பற்றி பேசினார். அப்போது அவர் ‛ஓசி'யில் பெண்கள் பயணம் செய்வதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்ச்சை வீடியோக்கள்
அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தான் தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதாவது மூதாட்டி ஒருவர் அரசு பஸ்சில் ஏறி ‛‛நான் ஓசியில் போக மாட்டேன். காசு கொடுக்கிறேன். டிக்கெட் கொடு'' என அந்த வீடியோவில் கேட்கிறார். இதுவும் விவாதப்பொருளாகி உள்ளது.
அடம்பிடித்த மூதாட்டி
அதாவது கோவை மாவட்டம் மதுக்கரையில் இருந்து பாலக்கரை நோக்கி சென்ற அரசு பஸ்சில் மூதாட்டி ஒருவர் ஏறுகிறார். அவர் கண்டக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் பெற முயற்சிக்கிறார். அதற்கு அவர் இலவச பயணம் செய்யலாம் என கூறும் நிலையில் அந்த மூதாட்டி "நான் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன், காசு கொடுக்கிறேன் சீட்டு கொடு. தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் ஓசியில் போகட்டும். நான் ஓசியில் வரமாட்டேன். காசை வாங்கிக் கொண்டு சீட்டைக் கொடு, ஓசின்னு சொல்லிக் காட்டுகிறார்கள். எனக்கு ஊசி தேவையில்லை'' என கூறுகிறார். இதையடுத்து கண்டக்டர் மூதாட்டியில் காசு வாங்கி கொண்டு டிக்கெட் வழங்குகிறார்.
கலவை விமர்சனம்
இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. இதனை பார்த்த மக்கள் கலவையான விமர்சனங்களை செய்து வருகின்றனர். திமுக அமைச்சரின் பேச்சுக்கு மூதாட்டி உரிய பதிலடி கொடுத்துள்ளதாக ஒரு தரப்பினர் கூறும் வேளையில், உள்நோக்கத்துடன் தவறான நோக்கத்தில் மூதாட்டியை செட் செய்து வீடியோ பரப்பப்பட்டு வருவதாக இன்னொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுக விமர்சனம்
இதற்கிடையே தான் அந்த மூதாட்டி யார்? என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி அதிமுகவை சேர்ந்த ஐடி விங்க் பிரமுகர் ஒருவர் அந்த மூதாட்டியை அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றி டிக்கெட் எடுக்குமாறு சொல்லிக் கொடுத்து இந்த வீடியோவை எடுத்திருப்பதை திமுக கூறிவருகிறது. இதுதொடர்பாக திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛கோவை அதிமுக IT WING -ஐ சார்ந்த பிரித்திவிராஜ் என்பவர் தன் பக்கத்து வீட்டு துளசியம்மாள் என்கிற அதிமுகவை சேர்ந்த மூதாட்டியை அழைத்து கொண்டு போய் TN 38 N 2841 எண் பேருந்தில் நடத்துனருடன் நான் ஓசியில் போக மாட்டேன் என பிரச்சனை செய்ய வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பரப்பி இருக்கிறார்'' என கூறியுள்ளார்.