மீண்டும் சுனாமி வந்தால்! சென்னைக்குள் எவ்வளவு தூரம் கடல் நீர் புகும் தெரியுமா? ஷாக் ஆய்வு ரிப்போர்ட்
சென்னை: கடந்த 2004ம் ஆண்டு தமிழ்நாடு சுனாமியால் கடுமையான பாதிப்புகளை சந்தித்திருந்த நிலையில், இனி அடுத்த முறை சுனாமி தாக்கினால் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆழ்கடலில் உள்ள நிலப்பரப்பில் ஏற்படும் பூகம்பம் காரணமாக சுனாமி உருவாவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொடக்கத்தில் ஜப்பான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் 2004ம் ஆண்டு தமிழ்நாட்டையும் இந்த சுனாமி கடுமையாக பாதித்திருக்கிறது. இதனையடுத்துதான் சுனாமி குறித்து விழிப்புணர்வு தமிழக மக்களுக்கு உருவானது. இந்த சுனாமியால் உலகம் முழுவதும் ஏறத்தாழ 2.27 லட்சம் பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். இந்த இழப்பு ஏற்பட்டு 22 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட அதன் வடு இன்னமும் மறையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சுனாமியில் தங்கள் உறவினர்களை இழந்த ஆயிரக்கணக்கானோர் டிசம்பர் மாதம் 26ம் தேதி கடலில் பாலை கொட்டி அவர்களை நினைவு கூறுகின்றனர். இந்த 22 ஆண்டுகளில் வளர்ந்து வந்த கண்டுபிடிப்புகளை கொண்டு இனி சுனாமி வருவதை எப்படி முன்கூட்டியே கணிப்பது என்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.

சுனாமி
சுனாமியை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் எனில் முதலில் புவியின் நிலப்பரப்பு குறித்து நாம் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். புவியில் 71 சதவிகிதம் அளவுக்கு வெறும் நீர் மட்டுமே இருக்கிறது. அதாவது, 29 சதவிகிதம் மட்டும்தான் நிலப்பரப்பு. அப்படி இருக்கையில் நிலப்பரப்பு குறித்து நாம் தெரிந்துகொண்டதும் ஓரளவுதான். இவ்வாறு இருக்கையில் நீருக்கடியில் இருக்கும் நிலப்பரப்பு குறித்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

ஆய்வு
அந்த வகையில் விஞ்ஞானிகள் இந்த நிலப்பரப்பின் நகர்வுகளை கண்காணிக்க தொடங்கினர். இந்த நகர்வின் மூலம்தான் சுனாமி உருவாவது பின்னர் தெரிய வந்தது. இந்த நகர்வு மூலம் தூண்டப்படும் அதிர்வுகள் அலைகளாக மாறி கரையை நோக்கி வரும்போது பேரலையாக இருக்கும். இந்த அலைகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக கடல் மட்டத்திற்கு சமமான பகுதியில் இது அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆக எந்த நிலப்பரப்பில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சென்னையில் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையமும், ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் மையமும் இணைந்து ஆய்வு நடத்தி புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதிக பாதிப்பு
இதன்படி, அடுத்தமுறை சுனாமி தாக்கினால் சென்னையை ஒட்டிய பகுதிகளில் சுமார் 2 கி.மீ தூரத்தில் கடல்நீர் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சில இடங்களில் சுமார் அரை கி.மீ துரத்திற்கு கடல் நீர் உட்புகும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக உத்தண்டி முதல் முட்டுக்காடு வரை சுமார் 500 மீட்டர் தூரம் வரை கடல்நீர் உட்புகலாம் என்றும் கூறியுள்ளனர். அதேபோல மாமல்லபுரம், கல்பாக்கம், பெரிய குப்பம் பகுதியில் சுமார் 4 மீட்டர் அளவிலும் கடல்நீர் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

குறைவான பாதிப்பு
ஆனால் இதே மாமல்லபுரம் சலவன் குப்பம் பகுதியில் சுமார் 1 கி.மீ தூரம் வரை கடல் நீர் உட்புகும். மேலும் சென்னையின் பிரதான பகுதிகளான ராயபுரம், கடற்கரை ரயில் நிலையம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதே கடற்பரப்பை விட கூடுதல் உயரம் கொண்ட இடங்களில் பாதிப்பு குறைவாகதான் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். பொதுவாக சுனாமி உருவாவதற்கு முன்னர் கடல் நீர் உட்புகும். இதுதான் மக்கள் அலர்ட் ஆக வேண்டிய நேரம். ஆனால் பலர் இதனை அதிசயம் என்று நினைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். எனவே இவ்வாறு கடல் நீர் உள்வாங்கும்போது முடிந்த அளவு கடலை விட்டு நாம் நீண்ட தூரம் சென்றுவிட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications