ஓபிஎஸ் மேல்முறையீடு சென்றால்.. ”ஒன்றும் நடக்காது” அதிமுகவின் வைகை செல்வன் அதிரடி!
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டாலும், இபிஎஸ்-க்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று தீா்ப்பளித்தாா்.
இதனைத்தொடர்ந்து தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் ஆகியோா் முன்பு ஆகஸ்ட் 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.
இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, தனிநீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பார்க்கப்பட்ட நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்துள்ளது. இதனால் இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஒற்றைத் தலைமை இருக்கும் போதுதான் அதிமுக சிறப்பாக செயல்படும். ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றால், எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து வைப்போம். ஓபிஎஸ் மேல்முறையீடு சென்றாலும், இபிஎஸ்-க்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications