பெரியார் கொள்கைக்கு எதிரான படத்துக்கு “நோ”.. கண்டிஷன் போட்டே நடிப்பேன் - நடிகர் சத்யராஜ் விளக்கம்
சென்னை: பெரியாரின் சுயமரியாதை கொள்கைகள், இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்கள் இடம்பெறக்கூடாது என்று ஒப்பந்தம் செய்துவிட்டுதான் திரைப்படத்திலேயே நடிப்பதாக நடிகர் சத்யராத் தெரிவித்து உள்ளார்.
ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி அதில் தானே கதாநாயகநாகவும் நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகியாக இவானா, முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு ஆகியோர் நடித்து உள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வரும் நவம்பர் 4 ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

நேர்காணல்
இந்த திரைப்படம் தொடர்பான தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், நடிகர் சத்யராஜ், கதாநாயகி இவானா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் திரைப்படம் தொடர்பாகவும், பிரபலங்களில் தனிப்பட்ட சினிமா அனுபவம் குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

நெறியாளர் கேள்வி
இந்த நேர்காணலில் நடிகர் சத்யராஜிடம் நெறியாளர், "அரசியல் கதாபாத்திரங்கள் பற்றி பேசும்போது உங்களுடைய அரசியல் கொள்கை மற்றும் நிலைபாடு, நீங்கள் பெரியாரியவாதி என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும். சினிமாவில் உங்கள் கொள்கைக்கு எதிராக ஏதாவது காட்சி, வசனம் இடம்பெற்றால் அதற்கு எப்படி எல்லையை நிர்ணயிப்பீர்கள்?" என கேள்வி எழுப்பினார்.

சத்யராஜ் பதில்
இதற்கு பதிலளித்த சத்யராஜ், "பெரியாருடைய பகுத்தறிவு சிந்தனை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு எதிரான வசனம் வராமல் பார்த்துக்கொள்வேன். அந்த படத்தில் நான் நடிக்காத காட்சியில் வந்தால்கூட அதுபற்றி கேட்பேன். ஷாரூக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஒப்பந்தத்திலேயே இதை குறிப்பிட்டேன்.

சென்னை எக்ஸ்பிரஸ்
இந்த படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே தமிழ் பெண்ணாக நடித்திருப்பார். அவரது தந்தையாக நான் நடித்திருப்பேன். அப்போது இயக்குநரிடம் நான் என்ன சொன்னேன் என்றால், 'ஷாரூக் கான் படத்தின் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கலாம். ஆனால் ஊரையே சேர்த்து விமர்சிக்கக்கூடாது.' என்றேன். அப்படியென்றால் மொத்த தமிழர்களையும் சொல்வதை போன்றதாகும். இதற்காக நான் தனி விதியே போட்டேன்." என்றார்.












Click it and Unblock the Notifications