872 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 18.89 லட்சம் வேலை.. அமெரிக்கா செல்லும்முன் ஸ்டாலின் தந்த டேட்டா
சென்னை: தமிழகத்தில் 18.89 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என்று அமெரிக்கா செல்லும் முன்பு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அதுமட்டுமின்றி அவரது அமெரிக்கா பயணத்தின் நோக்கம் பற்றி அவர் எடுத்துரைத்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். நாளை அவர் சான் பிரான்சிஸ்கோ நகரை சென்றடைய உள்ளார். அதன்பிறகு தொழில் முதலீட்டு மாநாடு, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களை அவர் சந்தித்து பேச உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மொத்தம் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பார். செப்டம்பர் 12ம் தேதி அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து அவர் மீண்டும் சென்னை வருகை தர உள்ளார். இந்நிலையில் தான் இன்று கோட்சூட் அணிந்து முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க புறப்பட்டு சென்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தனது அமெரிக்க சுற்றுப்பயணம் பற்றி விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
நான் அமெரிக்கா செல்கிறேன்.. தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்துவிட்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி திரும்பி வரும்படியாக எனது பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டதன் மூலம் பல்வேறு முதலீடுகள் வந்து இருக்கிறது.
இந்த பயணங்கள் மூலமாக 18 ஆயிரத்து 521 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய வகையில் ரூ.10,182 கோடி மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. 990 கோடிக்கு முதலீட்டுக்கான 5 திட்டங்கள் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி நடந்த தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் 5 திட்டங்களில் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனம் மற்றும் ஜப்பானின் நிறுவனம் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். இந்த 2 திட்டங்கள், 1,538 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.3,796 கோடி மதிப்பிலான 3 திட்டங்களில் கட்டுமான பணிகள் முன்னேற்ற நிலையில் உள்ளது. 438 கோடி மதிப்பிலான 2 விரிவாக திட்டம் விரைவில் செயல்படுத்தும் நிலையை அடைந்துள்ளது. ரூ.2,100 கோடி மதிப்பிலான 4 திட்டங்களை பொருத்தமட்டில் அந்தந்த நிறுவனங்களின் தொழில்முதலீட்டு சூழல் காரணமாக காரணமாக சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் துரிதமான நிலையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்ட தான் நான் இதையெல்லாம் விரிவாக இங்கு குறிப்பிட்டேன்.
திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த 3 ஆண்டு காலத்தில் இதுவரை 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதன் மொத்த மதிப்பு 9 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி ரூபாய். இதன் மூலம் 18 லட்சத்தது 89 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 234 திட்டங்கள் உற்பத்தியை தொடங்கி விட்டன. இதன்மூலம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதேபோல் மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக நான் கடந்த காலங்களில் வெளிநாட்டு பயணங்கள் காரணமாக பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதேபோல் தற்போதைய பயணம் மூலமாக மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களையும் தொடர்ந்து கண்காணித்து அது அனைத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவேன் தமிழ்நாட்டை 2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய நமது இலக்கை விரைவில் எட்டுவோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications