பரபரக்க வைத்த நடிகை பவுலின் தற்கொலை! வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி! சிக்கும் காதலன் சிராஜுதீன்?
சென்னை : சென்னையில் நடிகை பவுலின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் அவர் சோர்வுடன் வீட்டிற்குள் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதோடு, அவர் தற்கொலை தொடர்பாக அவரது காதலனான சிராஜுதீன் மற்றும் அவரது நண்பரான பிரபாகரன் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆந்திராவைச் சேர்ந்த நடிகையான பவுலின் என்கிற தீபா சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மல்லிகை அவன்யூ என்ற பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். அங்கிருந்துதான் அவர் படப்பிடிப்புகளுக்கு செல்வது வழக்கம்.
கடந்தாண்டு இயக்குனர் மகிவர்மன் இயக்கத்தில் வெளியான வாய்தா திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த பவுலின் அதற்கு முன்னதாக பல தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாகவும் பணியாற்றி இருக்கிறார்.

நடிகை பவுலின்
தற்போது அவர் மேலும் சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் சில ஆண்டுகளாக சிராஜ்தின் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று முன்தினம் இரவு நடிகை பவுலின் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை கடிதம்
அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தான் ஒரு நபரை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும் தனது காதல் நிறைவேறாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நேற்று மாலை உடற்கூறு ஆய்வு முடிந்ததற்கு பிறகு அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை
இந்த நிலையில் நடிகை தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்த கடிதம் மற்றும் அவரது செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி கோயம்பேடு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தற்கொலைக்கு முன்பாக நடிகை பவுலின் தனது காதலரான சிராஜுதீன் மற்றும் அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோரிடம் பேசியது தெரிய வந்தது. மிக முக்கியமாக தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் தனது காதலரான சிராஜுதீனிடம் வாக்குவாதம் செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டே தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீசார் நடத்திய விசாரணைகள் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள்
மேலும் நடிகை பவுலின் மரணத்தில் சிராஜுதீனின் நண்பரான பிரபாகரன் என்பவர் மீதும் சந்தேகம் இருப்பதால் அவரிடமும் சிராஜுதீனிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அவர் குடியிருந்த வீட்டின் அருகே சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்து அவரது வீட்டுக்கு யார் யாரெல்லாம் வந்து சென்றார்கள் முதல் நாள் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரித்தனர். அதில் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் வெளியே சென்று விட்டு ஆட்டோவில் வந்த நடிகை பவுலின் மிகவும் சோர்வாக வீட்டிற்குள் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

விசாரணை தீவிரம்
இந்த நிலையில் நடிகை பவுலின் காதலன் சிராஜுதீன் ஏற்கனவே திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் அவரை காதலித்து வந்ததும் அவர் மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. நடிகை பவுலின் உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்ற கோணத்தில் கோயம்பேடு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications